பாகிஸ்தானில் கனமழைக்கு 16 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழைக்கு 16 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், பஞ்சாப், கைபர் பக்துங்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் 3 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அப்பர் டிர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரின் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கைபர் பக்துங்வாவில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
இதுபோலவே பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களிலும் கனமழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story