எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்: 56 பேர் பலி


எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல்: 56 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2022 11:31 PM GMT (Updated: 9 Jan 2022 11:31 PM GMT)

எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

அடிஸ் அபபா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்கிற கிளர்ச்சி படைக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

டைக்ரே பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்கக்கோரி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். அதே வேளையில் அந்த நாட்டு ராணுவம் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் டைக்ரே பிராந்தியத்தின் மீது படையெடுத்து, அதை அரசின் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது.

இதற்காக டைக்ரே பிராந்தியத்தின் மீது தரை வழியாகாவும், வான் வழியாகவும் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்களே அதிக அளவில் பலியாகினர்.

இதற்கிடையில் டைக்ரே பிராந்தியத்தில் நடந்து வரும் இந்த போர் காரணமாக அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதரத்தை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் டைக்ரே பிராந்தியத்தில் டெடிபிட் என்கிற நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், உள்நாட்டுப்போரில் வீடுகளை இழந்த மக்களுக்கான அகதிகள் முகமாக செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டைக்ரே பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படைகள் வான்வழி தாக்குதலை நடத்தியது. அப்போது டெடிபிட் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதில் அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளிக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த வான்வழிதாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் பலரை சிறையில் இருந்து விடுவிப்பதாக அரசு அறிவித்த நிலையில், இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த வான்வழி தாக்குதல் குறித்து எத்தியோப்பியா ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Next Story