ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள்: விடுதலை செய்ய மத்திய அரசு கோரிக்கை


ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள்: விடுதலை செய்ய மத்திய அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2022 6:15 AM GMT (Updated: 12 Jan 2022 6:15 AM GMT)

சவுதி அரேபியாவுக்கு சென்றுகொண்டிருந்த கப்பலை ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், ஏமன் நாட்டின் சொஹொட்ரா தீவில் இருந்து கடந்த 2-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் சவுதி அரேபியாவின் ஜசன் நகரிருக்கு புறப்பட்டது. அந்த சரக்குகப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகள் பயணித்தனர்.

கப்பல் கடந்த 3-ம் தேதி இரவு ஏமனின் சலீப் துறைமுகத்தில் இருந்து கடலில் 25 நாட்டிகல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது அதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏறினர். மேலும், கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் உள்பட 11 மாலுமிகளையும் பிணைக்கைதிகளாக பிடித்து கப்பலையும் கடத்திச்சென்றனர். இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலையும், அதில் இருந்த மாலுமிகளையும் மீட்கும் பணியில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் எனவும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.  

Next Story