உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,
உலக அளவில் கடந்த வார கொரோனா நிலவர அறிக்கையை ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-
* கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 1.5 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்காவில் மட்டுமே 11 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. பிற பிராந்தியங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
* ஐரோப்பாவில் புதிய பாதிப்புகள் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு பலி 10 சதவீதம் சரிவு அடைந்துள்ளது.
* தென்கிழக்கு ஆசியாவில் பாதிப்பு 400 சதவீதம் அதிகம். இதில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தில் உயிர்ப்பலி 6 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story