ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்


ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 14 Jan 2022 6:28 AM GMT (Updated: 14 Jan 2022 6:28 AM GMT)

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்,

ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையாக ஈராக்கில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைத்திருந்தது. தற்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஈராக்கில் இருந்து பெரும்பாலான எண்ணிக்கையில் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்பட்டதனர். ஈராக்கில் தற்போது 2 ஆயிரத்து 500 அமெரிக்க படையினர் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஈரான் புரட்சிப்படை தளபதி காசின் சுலைமானி அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் கடந்த 2020-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. 4 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கியுள்ளன. 

பாக்த்தாத்தில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த பசுமை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தபப்ட்ட இந்த ஏவுகணை தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத போதும் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story