உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் - அமெரிக்கா தகவல்


உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் - அமெரிக்கா தகவல்
x
தினத்தந்தி 15 Jan 2022 2:40 AM GMT (Updated: 15 Jan 2022 2:40 AM GMT)

உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. 

இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷியா திட்டுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன் எல்லையில் மால்டோவா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷிய பாதுகாப்பு படையினர் மீது ரஷிய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளனர். 

இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என உக்ரைன் மீது ரஷியா குற்றஞ்சாட்ட உள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

சொந்தநாட்டு ராணுவத்தினர் மீதே தாக்குதல் அதை உக்ரைன் தான் நிகழ்த்தியது என பொய்யான தாக்குதல் குற்றச்சாட்டை ரஷியா செய்ய உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள தகவலை ரஷியா முழுவதும் மறுத்துள்ளது.

Next Story