பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்த மர்மநபர் உயிரிழப்பு..!


பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்த மர்மநபர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 16 Jan 2022 7:22 AM GMT (Updated: 16 Jan 2022 7:23 AM GMT)

அமெரிக்காவில், பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்த மர்மநபர் உயிரிழந்தார்.

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கோலிவில்லே பகுதியில் யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேல் சபை உள்ளது. நேற்று இந்த வழிபாட்டு ஆலயத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் ஆலயத்தில் இருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பணயக் கைதிகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

அந்த நபர் அமெரிக்காவால் வேடி கொய்தா என்று அழைக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆபியா சித்திக் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் கோர்ட்டு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தற்போது அவர் டெக்சாசின் போர்டுவொர்த்தில் உள்ள பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஆபியா சித்திக்கின் சகோதரராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது சகோதரர் ஹூஸ்டனில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அந்த மர்ம நபர் யாரென்று தெரியவில்லை.

இந்த நிலையில் 8 மணி நேரத்துக்கு பிறகு பணயக் கைதிகளில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் விரைவில் குடும்பத்துடன் சேர்க்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அதன்பின் மற்ற 3 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரும் காயம் இன்றி விடுவிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் அபாட் உறுதிப்படுத்தினார். 4 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபர் இறந்துவிட்டதாக கோலிவில்லே போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் குறித்த பிற தகவல்கள் வெளியாகவில்லை.

Next Story