லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் - இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்


லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் - இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Jan 2022 3:39 AM GMT (Updated: 17 Jan 2022 3:39 AM GMT)

இரு நாட்டு எல்லையான லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காத்மண்டு, 

இந்தியா-நேபாள எல்லை பகுதியில் அமைந்துள்ள லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி ஆகிய இடங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இந்த பகுதிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடங்களாக நீடித்து வருகின்றன.

இந்த நிலையில் உத்தரகாண்டில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, லிபுலேக் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் எனக்கூறினார். இதைப்போல இருநாட்டு எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நிலையானது என காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகமும் தெரிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து லிபுலேக் பகுதியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இது குறித்து நேபாள அரசு செய்தி தொடர்பாளர் ஞியானேந்திர பகதூர் கார்கி கூறுகையில், ‘மகாகாளி நிதிக்கு கிழக்கே உள்ள லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி பிராந்தியங்கள் நேபாளத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். எனவே நேபாள பிராந்தியத்தில் தன்னிச்சையாக நடைபெறும் எத்தகைய கட்டுமானங்களையும் இந்தியா நிறுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தால் இந்தியா-நேபாள எல்லை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Next Story