ஒமைக்ரான் கட்டுப்பாடு எதிரொலி; நியூசிலாந்து பிரதமர் திருமணம் ரத்து


ஒமைக்ரான் கட்டுப்பாடு எதிரொலி; நியூசிலாந்து பிரதமர் திருமணம் ரத்து
x
தினத்தந்தி 23 Jan 2022 8:24 AM GMT (Updated: 23 Jan 2022 8:24 AM GMT)

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.




சிட்னி,



நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் ஜெசிந்தா ஆர்டென் (வயது 40).  தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (வயது 44) என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது.

நியூசிலாந்து நாட்டின் மிக இளம்வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பேற்று கொண்டார்.  இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அக்டோபரில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றார்.  அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டு கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளன.  இதற்காக அவர் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில், கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் பாதிப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.  இந்த பாதிப்பு நியூசிலாந்திலும் ஏற்பட தொடங்கியுள்ளது.

அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் இருந்து விமானத்தில் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பம் ஒன்று சென்றுள்ளது.  இதில் அந்த குடும்பத்தினருக்கும், விமான பணியாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.  9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன.

இதனால், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  இதன்படி, முக கவசங்களை அதிகம் அணிவது, உணவு விடுதி உள்ளிட்ட இடங்கள், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு அனுமதி ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.  இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது திருமணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.  நியூசிலாந்து மக்கள் பலர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது மிக அதிக வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.  திருமணம் ரத்துபற்றி எப்படி உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, வாழ்க்கை இதுபோன்றே இருக்கும் என பதிலளித்து உள்ளார்.


Next Story