உக்ரைனுக்கு எதிரான போர்: இந்தியா யாருக்கு ஆதரவு..? ரஷிய ராக்கெட்டில் இந்திய கொடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 March 2022 6:54 AM GMT (Updated: 3 March 2022 7:19 AM GMT)

செயற்கைக்கோள்களை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டில் இந்தியாவின் கொடியை மட்டும் மறைக்காமல் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ, 

உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இந்த சூழலில் உலக வரலாற்றில் முதல் முறையாக, பூமியில் நடைபெறும் போரின் தாக்கம் விண்வெளியில் உணரப்பட உள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது விதித்த பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் கேள்விக்குறியாகும் என்று ரஷியா கூறியதை அடுத்து, தற்போது தாங்கள் ஏவவுள்ள ராக்கெட்டில் இருந்து விண்வெளித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளையும் அகற்றியுள்ளனர். இந்தியாவின் கொடியைத் தவிர...!

ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் (ROSCOSMOS)-இன் தலைவர் டிமிட்ரி ரோகோசின், வெள்ளிக்கிழமை ஏவப்பட உள்ள ஒன்வெப் (OneWeb) ராக்கெட்டில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கொடிகளை பைகோனூர் ஏவுதளத்தில் உள்ள தொழிலாளர்கள் மறைப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார். ஆனால், அதில் இந்தியாவின் கொடி அப்படியே விடப்பட்டது.

மேலும்  வீடியோவை வெளியிட்ட, ரோகோசின் ரஷிய மொழியில், “பைக்கோனூரில் உள்ள ஏவுகணைகள் சில நாடுகளின் கொடிகள் இல்லாமல், எங்கள் ராக்கெட் மிகவும் அழகாக இருக்கும் என்று முடிவு செய்தோம்”என்று தெரிவித்தார். 

வீடியோவில், பைக்கோனூர் ஏவுதளத்தில் உள்ள ஏவுகணைகள், சோயூஸ் ராக்கெட்டில் உள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து கொடிகளில் வெள்ளை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அவை முழுவதுமாக மறைக்கப்பட்டது. 

சோயூஸ் ராக்கெட் பல்வேறு நாடுகளில் இருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது, இது ஒன்வெப் திட்டத்தின் கீழ் பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்கும். இந்த திட்டம் 648 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவற்றில் 428 செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டுள்ளன, அவை அனைத்தும் சோயூஸ் ராக்கெட்டை பயன்படுத்துகின்றன. பார்தி ஏர்டெல் குழுமம் மற்றும் இங்கிலாந்து அரசு இந்த திட்டத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story