"எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கலாம்"- பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து..!!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 5 May 2022 10:57 AM GMT (Updated: 5 May 2022 10:57 AM GMT)

டுவிட்டரை வைத்து மஸ்க் என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார்.

அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்-யிடம் சென்று இருப்பது குறித்தும் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும்  உலக கோடீஸ்வரர்களின் ஒருவருமான பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பில் கேட்ஸ் கூறுகையில், " எலான் மஸ்க் உண்மையில் டுவிட்டரை இன்னும் மோசமாக்க முடியும். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

அதே நேரத்தில் அவரது மற்ற நிறுவனங்களில் (டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ) சாதனை அற்புதமாக உள்ளது. அந்த நிறுவனங்களில் சிறந்த பொறியாளர்கள் குழுவை ஒன்றிணைத்து உள்ளத்தில் மஸ்க் சிறப்பாக செயல்ப்பட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். 

ஆனால் டுவிட்டர் நிறுவனத்திலும் அவரால் அதை செய்ய முடியுமா என்று  எனக்கு சந்தேகம் உள்ளது, ஆனால் அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது" என்று பில் கேட்ஸ் கூறினார்.

Next Story