மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்கிறார்..! பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் அழைப்பு..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 7 May 2022 10:56 PM GMT (Updated: 7 May 2022 10:56 PM GMT)

இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொழும்பு, 

இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நாளை அவர் பதவி விலகுவார் என தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைக்க வருமாறு பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அதிபரிடம், சில நிபந்தனைகளை ஏற்பதாக இருந்தால் பிரதமர் பதவியை ஏற்கலாம் என பிரேமதாசா கூறியுள்ளார். அதாவது மகிந்த ராஜபக்சே நாளைக்குள் பதவி விலக வேண்டும், அதிபரின் சில அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.

சஜித் பிரேமதாசாவின் இந்த நிபந்தனைகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகளை சஜித் பிரேமதாசா தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இன்று அவர் சந்தித்து பேச உள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதன் மூலம் இலங்கை அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

Next Story