பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை: வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு - 3 பேர் பலி


image courtesy: AFP
x
image courtesy: AFP
தினத்தந்தி 9 May 2022 8:25 PM GMT (Updated: 9 May 2022 8:25 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.

மணிலா, 

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அதிபரை தவிர்த்து, துணை அதிபர், 12 செனட்சபை உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காவும் தேர்தல் நடந்தது.

வாக்களிக்க தகுதி பெற்ற 6.5 கோடி மக்களுக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் நேரடிப்படி காலை 6 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய நிலையில் மக்கள் அதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். இதன் மூலம் கடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸ் நாடு தேர்தலின்போது மோசமான வன்முறைகளை சந்தித்த வரலாற்றை கொண்டிருப்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் அதை மீறியும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான மகுயிண்டனாவில் புலாவன் என்கிற நகரில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 2 வேன்களில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

வாக்காளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதேபோல் பசிலன் மாகாணத்தில் சுமிசிப் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

முன்னதாக மகுயிண்டனாவ் மாகாணத்தில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதேபோல் மிண்டானாவ் மாகாணத்தில் உள்ள டவுஅன்சே நகரிலும், ஷெரீப் அகுவாக் நகரிலும் வாக்குச்சாவடிகள் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டதாகவும் எனினும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது மகுயிண்டனாவ் மாகாணத்தில் அப்போதைய ஆளுநரின் ஆதரவாளர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 32 பத்திரிகையாளர்கள் உட்பட 58 பேர் கொன்று குவிக்கப்பட்டு, உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு 10 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிலிப்பைன்சின் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோசின் மகன் போங்போங் மார்கோஸ் மற்றும் தற்போதைய துணை அதிபர் லெனி ரோபெர்டோ ஆகிய இருவரில் ஒருவரே அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதே போல் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் மகள் சாரா துதர்தே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

Next Story