மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார்....? பரபரப்பு தகவல்கள்


மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார்....? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 11 May 2022 5:59 AM GMT (Updated: 11 May 2022 5:59 AM GMT)

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு

அண்டை நாடான இலங்கையில், 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கரைந்து போனது. இறக்குமதி நின்று போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதுவும் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், கோபாவேசமும் மேலும் வலுத்தது.
இந்த நிலையில், இதுவரையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்து, அதில் ஒட்டிக்கொண்டிருந்த மகிந்த ராஜபக்சே (வயது 76), நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பதவி விலகினார். 

அதேநேரத்தில், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர். இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி இருப்பதாக கூறுகிறது. இப்படி தொடர்ந்து பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ள இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்து உள்ளார்.  இலங்கையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. 

இதனிடையே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக இலங்கையில் பரவலாக செய்திகள் பரவின.ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள இந்திய தூதரகம், ”இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்திய தூதரகம் அத்தகைய தகவல்களை திட்டவட்டமாக மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

ஆனால் திருகோணமலையை  தீவு ஒன்றில் ராஜபக்ச குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

மகிந்த, சமல், பசில் ஆகியோரும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குடும்பமும் இங்கு பதுங்கியுள்ளதாக தெரிய வந்து உள்ளது.

கொழும்பிலிருந்து அங்கு தப்பிச் செல்வதற்கு தேவையான உதவிகளை ராணுவத்தினர் செய்துள்ளனர். இதற்கான அனுமதியை அதிபர்  கோத்தபய  ராஜபக்சே வழங்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒன்பதாம் தேதி அலரி மாளிகைக்குள் சிக்கியிருந்த மகிந்த ராஜபக்சே பலத்த போராட்டத்திற்கு மத்தியில் ராணுவ பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த சீன நிறுவனத்திற்கு சொந்தமான ஷங்கீரிலா ஓட்டலில் தங்கிருந்த நிலையில், அங்கிருந்து ஹெலிகாப்டர்  மூலம் திருகோணமலை நோக்கி பயணித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ  ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று விளக்கம் கோரியுள்ளது.

அதிபரின்  உத்தரவை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் மகிந்த ராஜபக்சே ஹெலிகாபடர்  வழங்கப்பட்டதாக விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொழும்பில் இருந்துஹெலிகாப்டர் மூலம் செல்லும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பம்பலப்பிட்டி போலீஸ் தலைமையகத்திலிருந்து இரண்டு பெண்கள் ஹெலிகாப்டரில் ஏறுவதைக் காணமுடிந்தது. மேலும், கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஓட்டலில் இருந்து மற்றொரு ஹெலிகாபடர்  புறப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

Next Story