நைஜீரியாவில் பள்ளி மாணவி கல்லால் அடித்து கொலை: சக மாணவர்கள் வெறிச்செயல்


நைஜீரியாவில் பள்ளி மாணவி கல்லால் அடித்து கொலை: சக மாணவர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 May 2022 9:16 PM GMT (Updated: 13 May 2022 9:16 PM GMT)

நைஜீரியாவில் பள்ளி மாணவி ஒருவர் சக மாணவர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அபுஜா, 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் டெபோரா சாமுவேல் என்கிற மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை அந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பகிர்ந்தாக கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அந்த மதத்தை சேர்ந்த மாணவர்கள் மாணவி டெபோரா சாமுவேலை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர்.

பள்ளிக்காவலர்கள் மற்றும் தகவலின் பேரில் வந்த போலீசார் மாணவர்களிடம் இருந்து மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மாணவர்கள் கற்களை வீசி அவர்களை விரட்டிய நிலையில், மாணவியை கல்லால் அடித்து கொலை செய்தனர். அதன் பின்னர் ஆத்திரம் அடங்காத மாணவர்கள் மாணவியின் உடலை தீ வைத்து எரித்தனர்.

அதன் பின்னர் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்டியடித்தனர்.

மதநிந்தனை குற்றச்சாட்டில் பள்ளி மாணவியை சக மாணவர்கள் கல்லால் அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவம் நைஜீரியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story