நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்றார்


நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்றார்
x
தினத்தந்தி 25 Jan 2023 4:58 AM GMT (Updated: 25 Jan 2023 5:38 AM GMT)

நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று காலை முறைப்படி பதவியேற்று கொண்டார்

வெல்லிங்டன்,



நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி 2020-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென் 2-வது முறையாக பிரதமரானார்.

அவர், மிக இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன் ஜெசிந்தா, பிரதமர் பதவியில் இருந்து விலக இருக்கிறேன் என திடீரென அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதுபற்றி ஜெசிந்தா ஆர்டென் கூறியபோது, வருகிற பிப்ரவரி 7-ந்தேதியே, பிரதமராக பதவி வகிக்கும் தனது கடைசி நாளாக இருக்கும். மறுதேர்தலை கோரமாட்டேன் என கூறினார். அடுத்த பொது தேர்தல் நடப்பு ஆண்டின் அக்டோபர் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அவர் ஊடகத்திடம் அளித்த பேட்டியின்போது கூறினார்.

சுதந்திரா தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆர்டென் பிரதமராக ஐந்தரை ஆண்டுகளாக பதவி வகித்ததுடன், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டை திறமையாக வழி நடத்தி சென்றதில் அவருடைய பணி பெரும் பங்கு வகித்தது.

இந்நிலையில், திடீரென அவர் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தனது அரசு நிறைய சாதனைகளை படைத்து உள்ளது என கூறிய அவர், அடுத்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் என தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அக்கட்சியை சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளிவந்தன. இதன்படி, இன்று காலை அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதனை முன்னிட்டு, பிரதமராக பதவி வகித்து வந்த ஆர்டென், அரசு இல்லத்தில் முறைப்படி தனது ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து, பதவி விலகல் கடிதமும் அளித்து உள்ளார்.

இதன்பின், புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஹிப்கின்ஸ் மற்றும் துணை பிரதமர் கார்மெல் செபுலோனி ஆகியோர் அந்நாட்டு நேரப்படி காலை 11.20 மணியளவில் அரசு இல்லத்திற்கு வருகை தந்தனர். கிறிஸ் ஹிப்கின்ஸ் முறைப்படி 41-வது பிரதமராக இன்று காலை பதவியேற்று கொண்டார்.

அதன்பின் அவர் கூறும்போது, தனது அமைச்சரவையில், பணவீக்க பெருந்தொற்று விசயங்களை எதிர்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமுடன் கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிப்கின்ஸ், 2020-ம் ஆண்டு நவம்பரில் கொரோனா தடுப்புக்கான மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் காவல், கல்வி மற்றும் பொது சேவை ஆகிய துறைகளின் மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார்.


Next Story