ஈரான் புரட்சிப்படையின் மற்றொரு தளபதி மர்மமான முறையில் உயிரிழப்பு - பின்னணியில் இஸ்ரேல்?


ஈரான் புரட்சிப்படையின் மற்றொரு தளபதி மர்மமான முறையில் உயிரிழப்பு - பின்னணியில் இஸ்ரேல்?
x

ஈரான் புரட்சிப்படையின் மற்றொரு தளபதி இன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தெஹ்ரான்,

ஈரான் ராணுவத்தில் புரட்சிப்படை பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் 'குவாட்ஸ்' என்ற சிறப்பு படை உள்ளது. இந்த குவாட்ஸ் பிரிவு வெளிநாடுகளில் உளவு, ரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஈரானின் எதிரியாக கருத்தப்படும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தல் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை இந்த குவாட்ஸ் படை பிரிவு செயல்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், புரட்சிப்படையின் குவாட்ஸ் பிரிவை சேர்ந்த ராணுவ அதிகாரி இன்று உயிரிழந்துள்ளார். குவாட்ஸ் பிரிவில் அலி இஸ்மாயில்சாதிக் கர்னலாக பணியாற்றி வந்தார். இவர் தலைநகர் தெக்ரானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராஜ் நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், புரட்சிப்படையின் குவாட்ஸ் பிரிவு கர்னல் அலி இஸ்மாயில்சாதிக் இன்று தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அலி எப்படி உயிரிழந்தார் என்பதை தெரிவிக்க ஈரான் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஆனால், அலி தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, குவாட்ஸ் பிரிவு கர்னல் அலி இஸ்மாயில்சாதிக் உயிரிழப்பின் பின்னணியில் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 24-ம் தேதி குவாட்ஸ் பிரிவின் மற்றொரு கர்னல் ஹசன் சையது ஹூடாய் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டபோது பைக்கில் வந்த இருவர் ஹசனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

அதேபோல், கடந்த 2020-ம் ஆண்டு ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களுக்குள் புரட்சிப்படையின் குவாட்ஸ் பிரிவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு ஈரானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story