இவ்வளவு பெரிய ரஷியா இருக்கும் போது எங்கள் வீட்டை ஏன் குண்டுவீசி அழிக்கிறீர்கள்? 80 வயது உக்ரைன் மூதாட்டி கேள்வி
உக்ரைனில் வாழ்ந்துவரும் 82 வயதான மூதாட்டியின் வீடு ரஷிய வான்வழி தாக்குதலில் குண்டுவீசி அழிக்கப்பட்டது.
கீவ்,
உக்ரைன் மீதான போர் இன்று நான்காவது மாதத்தில் நுழைகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட போர் 3 மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் சில கடினமான பொருளாதார, கலாச்சார மற்றும் விளையாட்டுத் தடைகள் இருந்தபோதிலும், போர் நடவடிக்கைகளிலிருந்து ரஷிய அதிபர் புதின் எந்த நேரத்திலும் பின்வாங்கும் அறிகுறி இல்லை.
உக்ரைனின் டான்பாஸ், இப்போது ரஷியாவின் கொடூரமான போரின் மையமாக உள்ளது. இதனால் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியுடன் நேரடி இணைப்பை வழங்கும் பாக்முத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
மேலும், பாக்முத் பகுதியானது, உக்ரேனிய போர் கட்டளை மையமாக செயல்படும் ஒரு முக்கியமான சந்திப்பாக உள்ள பகுதி. இந்நிலையில், பாக்முத்தை கைப்பற்ற ரஷியா பல நாட்களாக போராடி வருகிறது.
சமீபத்திய ரஷிய வான்வழித் தாக்குதலால் அங்கு பல வீடுகள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில், அங்கு வாழ்ந்துவரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதான மூதாட்டியின் வீடும் அழிவை சந்தித்தது. இதன் காரணமாக, அந்த மூதாட்டி இடிபாடுகளுக்கு மத்தியில் பயத்துடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளால் ஏவப்பட்ட வெடிகுண்டு, தனது சமையலறையில் தரையிறங்கிய திகிலூட்டும் தருணத்தை அந்த மூதாட்டி மனவேதனையுடன் விவரித்தார். அவர் கூறியதாவது:-
"நான் காயமடையாமல் இருக்க, கடவுளிடம் என் வழக்கமான காலை பிரார்த்தனையை செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், ஒரு பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது. என் தலையில் சில சாதனங்கள் விழ ஆரம்பித்தன. ரஷிய வான்வழி தாக்குதலால் என் முழு வீடும் சேதமடைந்தது.
நான் கடவுளிடம் கேட்கிறேன், 'அவர்களுக்கு(ரஷியர்களுக்கு) என்ன தான் வேண்டும்? ரஷ்யா அவர்களுக்கு போதுமானதாக இல்லையா? அவர்கள் ஏன் மக்களைக் கொல்கிறார்கள்?' இந்த காரணத்தை நான் கடவுளிடம் கேட்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் அழகிய கிராமத்து வீடுகள் இருந்த பாக்முத் கிராமத்தின் முழு வீடுகளும் இடிந்து, எரிந்த மரக் கம்பங்களும், மண் குவியல்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.
"Every day I pray to God asking to avoid injuries. God heard me. God is watching over me."
Ukrainian villagers count their blessings despite losing almost everything but their lives three months into Russia's invasionhttps://t.co/4lILAVoeuf pic.twitter.com/gfe0Hrzbof
ஏ எப் பி செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், மரியாவின் வீட்டிற்கு மட்டுமல்ல, அவரது அண்டை வீட்டார் மற்றும் சமூகத்தில் உள்ள மற்றவர்களின் வீடும் உடமைகளும் பேரழிவை சந்தித்துள்ளன என்பது அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது.
இது குறித்து பாக்முத்தின் துணை மேயர் மாக்சிம் சுட்கோவோய் கூறுகையில், "மக்கள் அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டாலும், தங்கள் வீடுகளையும் வாழ்க்கையையும் விட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் அவர்கள் வெளியேற வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்றார்.
ரஷியாவின் கொடூர தாக்குதலில் உக்ரைனில் ஒரு அப்பாவி பெண் கொல்லப்பட்டதில், ரஷிய வீரர் ஒருவர் போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உக்ரைன் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து, ரஷியாவால் கைது செய்யப்பட்ட உக்ரேனிய வீரர்களுக்கும் இதே போன்ற தண்டனை வழங்கப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மரியா போன்ற பொதுமக்களை ரஷியா குறிவைப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது நவீன போர் விதிகளுக்கு எதிரான செயல் ஆகும். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷியா தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.