அல் ஜசீரா நிறுவன பெண் செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டது யாரால்? - இஸ்ரேல் ராணுவம் புதிய தகவல்


அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டது யாரால் என்பது குறித்த புதிய தகவலை இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள முகாமில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இது தொடர்பான செய்தியை சேகரிக்க அப்பகுதிக்கு அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா சென்றிருந்தார்.

அப்போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஷெரீன் அபு அல்லெஹா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷெரீன் அபு அல்லெஹா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

அதேவேளை, செய்தியாளர் ஷெரீன் பாலஸ்தீன பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் அல்லது பாதுகாப்பு படை வாகனத்தில் இருந்து ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஷெரீன் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தது. அதேவேளை ஷெரீன் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டை ஆராய்ந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பதை ஆராய்ந்து தெரிவிப்போம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஆனால், தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்த துப்பாக்கிக்குண்டை ஆய்வுக்காக இஸ்ரேலிடம் ஒப்படைக்க பாலஸ்தீனம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், அல் ஜசீரா செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா தங்கள் பாதுகாப்புபடையினரின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும், ஷெரீனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிக்குண்டை ஆய்வுக்காக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே அதன் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு ஷெரீன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்த உறுதியான தகவலை தெரிவிக்க முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story