கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுப்பு: துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை


கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுப்பு:  துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை
x

வீடியோ கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்த வருத்தத்தில் பாகிஸ்தானில், துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

பஞ்சாப்,



பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனினும், இதனால் சில ஆபத்துகளும் ஏற்படுகின்றன. லாகூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19-ந்தேதி அலி ஜாயின் என்ற சிறுவன் தனது தாயார், 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான்.

அந்த பப்ஜி விளையாட்டில் தொடர்ந்து தோல்வி அடைந்ததில் சிறுவன் விரக்தி அடைந்துள்ளான். விளையாட்டில் வருவதுபோல, துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் அனைவரும் மீண்டு வருவார்கள் என நினைத்து அவர்களை சுட்டுள்ளான் என போலீசார் தெரிவித்து உள்ளனர் என தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு, ஆபத்து விளைவிக்கும் பப்ஜி உள்ளிட்ட வீடியோ கேம்களுக்கு தடை விதிக்க பரிந்துரை அனுப்ப பாகிஸ்தான் போலீசார் முடிவு செய்துள்ளனர். எனினும், லாகூர் ஐகோர்ட்டு இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதேபோன்றதொரு மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாகாணத்தின் போர்ட் அப்பாஸ் என்ற பகுதியில் நடந்தேறி உள்ளது. முகமது ஆதிப் என்ற சிறுவன் பப்ஜி கேம் விளையாடுவதில் ஆர்வமுடன் இருந்துள்ளான்.

இதனால், அதே சிந்தனையில் மூழ்கிய சிறுவன் தனது பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால், இதற்கு பெற்றோர் மறுத்து விட்டனர் என கூறப்படுகிறது. இதனால், மனவருத்தம் அடைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இதுபோன்ற சிறுவயதில் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது மற்றும் விளையாடுபவர்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானில் 2020-ம் ஆண்டு பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.


Next Story