போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபருடன் மட்டுமே பேச தயார்; ஜெலன்ஸ்கி


போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபருடன் மட்டுமே பேச தயார்; ஜெலன்ஸ்கி
x

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

டாவோஸ்,

உக்ரைனுக்கு எதிராக ரஷிய கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி 24ந்தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. போர் தொடங்கி இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றன.

ரஷிய போரில் எண்ணற்ற வீரர்கள் உள்பட, பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் தீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போரில், குடிமக்களை இலக்காக கொள்ளவில்லை என ரஷியா மறுப்பு தெரிவித்து உள்ளது. உக்ரைனிய ராணுவத்தின் மீது நடத்தப்படும் சிறப்பு நடவடிக்கை என்றே ரஷியா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் டாவோசில் உலக பொருளாதார கூட்டமைப்பில் பார்வையாளர்கள் மத்தியில் வீடியோ இணைப்பு வழியே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.

அவர் பேசும்போது, போரின் தொடக்கத்தில் கீவ் நகருக்கு வெளியே ரஷிய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதியில் நிறைய பேர் கொல்லப்பட்டு இருந்தனர். அவர்களின் உடல்களை நாங்கள் மீட்டோம். ஒருபுறம் போர் நடந்து பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், ரஷியாவின் பிற அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவது என்பது ஏற்க முடியாதது.

ரஷிய அதிபர் புதின் தவிர, ரஷிய கூட்டமைப்பு சார்பில் வரும் யாருடனும் எந்த கூட்டத்திலும் பேச நான் தயாராக இல்லை. அதிலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரம் பற்றி மட்டுமே நான் பேசுவேன். வேறு எந்தவித கூட்டம் நடைபெறுவதற்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷிய கூட்டமைப்பின் அதிபரே அனைத்து விவகாரங்களையும் முடிவு செய்கிறார். அவர் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி நாம் பேசினால், அதில் போரை நிறுத்தும் முடிவை எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் தொலைக்காட்சியில் பேசிய ஜெலன்ஸ்கி தூதரக அளவிலான பேச்சுவார்த்தை இன்றி போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது என குறிப்பிட்டார்.

இந்த போரானது அதிக அளவில் மனிதர்களை விலையாக கொடுத்துள்ள சூழலை உக்ரைனியர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனிய படைகள் கார்கிவ் நகரருகே வெற்றியை நோக்கி செல்கின்றன.

ஆனால், தொன்பாசில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து உள்ளது. எங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர் என கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ரஷியா மற்றும் உக்ரைன் என இரு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், அதில் தீர்வு எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.


Next Story