ரஷியா-சிரியா கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சி


ரஷியா-சிரியா கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சி
x

ரஷியா மற்றும் சிரியாவின் விமானப்படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் குறித்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

டமாஸ்கஸ்,

சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா மற்றும் சிரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு, ரஷிய விமானப்படை முதல் முறையாக சிரியாவுடன் இணைந்து இந்த வான்வழித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.

ரஷியாவின் 'எஸ்.யூ-24 எம்', 'எஸ்.யூ-34 எம்', 'எஸ்.யூ-35 எஸ்' ரக விமானங்களும், சிரியாவின் 'எம்.ஐ.ஜி-23 எம்.எல்' மற்றும் 'எம்.ஐ.ஜி-29' ரக விமானங்களும் இணைந்து போர்க்காலங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மேற்கொண்டதாக சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில், டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதிகளில் சிரியாவின் ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் நாட்டின் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிரியா-ரஷியா இடையிலான இந்த கூட்டுப் பயிற்சி குறித்த தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story