சீனர்கள் மீது தொடர் தாக்குதல்; தடுத்து நிறுத்த பாகிஸ்தானிடம் வலியுறுத்திய சீனா


சீனர்கள் மீது தொடர் தாக்குதல்; தடுத்து நிறுத்த பாகிஸ்தானிடம் வலியுறுத்திய சீனா
x

சீனர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவித் பாஜ்வாவிடம் சீனா வலியுறுத்தி உள்ளது.



லாகூர்,



பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும், பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள கராச்சி பல்கலை கழகத்தின் வளாகத்திற்குள் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்பட 3 சீனர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி காமர் ஜாவித் பாஜ்வா தலைமையிலான ராணுவ குழு ஒன்று சீனாவுக்கு கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரையில் பயணம் மேற்கொண்டது.

இதில், சீன ராணுவம் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளுடன் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் விரிவான அளவில் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இதில், சீன தரப்பில் அந்நாட்டு மத்திய ராணுவ ஆணையத்தின் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்சியா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில், சர்வதேச மற்றும் மண்டல அளவிலான பாதுகாப்பு சூழ்நிலைகளை பற்றிய தங்களது பார்வைகளை இரு தரப்பும் ஆலோசித்தன.

சமீப காலங்களாக பாகிஸ்தானில் தொடர்ந்து சீனர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்கள் மற்றும் தளவாடங்கள் கொண்ட வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவு ஒன்றை மத்திய காவல் அலுவலகத்தில் அமைக்க இஸ்லாமாபாத் போலீஸ் சமீபத்தில் முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த கூட்டத்தில், பயங்கரவாதத்தினை ஒழிக்கும் பணியை மேம்பட்ட ஒத்துழைப்புடன் செயல்படுத்த இரு தரப்பிலும் உறுதி எடுத்து கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் அவர்கள் திருப்தி தெரிவித்து உள்ளனர்.


Next Story