கருக்கலைப்பு உரிமை ரத்து - அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


கருக்கலைப்பு உரிமை ரத்து - அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 25 Jun 2022 2:36 AM GMT (Updated: 25 Jun 2022 9:53 AM GMT)

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது' என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கருக்கலைப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மாகாணங்களில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க எனது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவேன். கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு கோர்ட்டு மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பறித்துள்ளது' என்றார்.


Next Story