ரிஷி சுனக்-ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்


ரிஷி சுனக்-ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்
x

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் குறித்து தொலைபேசியில் உரையாடினர்.

வாஷிங்டன்,

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அதைதொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் "உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷியாவை அதன் ஆக்கிரமிப்புக்கு பொறுப்பேற்க செய்வதற்கும், சீனா முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும், நிலையான எரிசக்தி வளங்களை பாதுகாப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இரு தலைவர்களும் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான சிறப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு முக்கியமான பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அவர்களின் விருப்பத்தை தெரிவித்தனர்" என கூறப்பட்டுள்ளது.

ஜோ பைடனுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின் ரிஷி சுனக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "அமெரிக்காவும் இங்கிலாந்தும் நெருங்கிய கூட்டாளிகள். உலகம் முழுவதும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக எங்களது முக்கிய பங்கை தொடரவும், அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story