காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரம்
x
தினத்தந்தி 7 Feb 2017 10:00 AM GMT (Updated: 7 Feb 2017 10:00 AM GMT)

நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தவன் பிரகலாதன். இவன் இரண்யகசிபு என்ற அசுரனின் மகன்.

நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தவன் பிரகலாதன். இவன் இரண்யகசிபு என்ற அசுரனின் மகன். தன்னுடைய மகன் தனது எதிரியான நாராயணனின் நாமத்தைச் சொல்வதை இரண்யகசிபுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே பிரகலாதனை அழைத்து, ‘நீ நாராயணனை வழிபடக் கூடாது. என்னைத்தான் வணங்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினான்.

பிரகலாதனோ, தந்தைக்கே அறிவுரை கூறத் தொடங்கி விட்டான். ‘நாராயணன் தான் கடவுள். அவரை வணங்கி நல்வாழ்வு பெறுங்கள்’ என்றான். கோபம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனைக் கொல்லத் துணிந்தான். ஆனால் அவன் மேற்கொண்ட அனைத்து வழிகளும் அடைப்பட்டன. ஒவ்வொரு முறையும்  நாராயணர், பிரகலாதனை காப்பாற்றிக்கொண்டே இருந்தார்.

மகனை அழிக்கவும் முடியவில்லை. அவனை தன் வழிக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் இரண்யகசிபுவின் ஆத்திரம் உச்சத்தை அடைந்தது. ஒரு நாள் தன் மகன் பிரகலாதனிடம், ‘உன்னுடைய நாராயணன் எங்கிருக்கிறான்?’ என்று கேட்க, அதற்கு பிரகலாதன், ‘அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்’ என்றான்.

உடனே இரண்யகசிபு, ‘அப்படியானால் இந்த தூணில் இருக்கிறானா?’ என்று கேட்டு தூணை உடைக்க, அதில் இருந்து சிங்கத் தலையும், மனித உடலுமாக நரசிம்மர் வெளிப்பட்டார். பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்தார் என்பது வரலாறு. இறைவன் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் செய்தது, ஆந்திர மாநிலம் அகோபிலம் திருத்தலத்தில் என்பது புராண வரலாறு. திருமாலின் அவதாரங்களிலேயே உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்.

இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபடும் போது, அவருக்கான காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

நரசிம்மர் காயத்ரி

‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’


வஜ்ரநாகனை நாம் அறிந்து கொள்வோம். அருளை வழங்கும் அந்த இறைவனின் மீது நாம் தியானம் செய்வோம். நரசிம்மனாகிய அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

நரசிம்மரை வழிபடும் போது தினமும் 108 முறை இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் உண்டாகும். பகைவர்களால் வரும் ஆபத்து விலகும். பதவிகள் வந்து சேரும். முக்தியை அடையலாம்.

Next Story