தோ‌ஷங்கள் போக்கும் ராமநாதர்


தோ‌ஷங்கள் போக்கும் ராமநாதர்
x
தினத்தந்தி 14 Feb 2017 1:00 AM GMT (Updated: 13 Feb 2017 9:57 AM GMT)

ராமபிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம் ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோவில். எனவேதான், ராமாயணம் எவ்வளவு பழமையானதோ, அதே அளவு பழமையானது ராமேஸ்வரம் திருத்தலம் என்கிறார்கள்.

ராமபிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம் ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோவில். எனவேதான், ராமாயணம் எவ்வளவு பழமையானதோ, அதே அளவு பழமையானது ராமேஸ்வரம் திருத்தலம் என்கிறார்கள். தெய்வீகத் தன்மை கொண்டதாக கருதப்படும் கோவில்களில் ஒன்றான ராமநாதர் கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

இந்துக்கள் பலரும் இந்தியாவில் உள்ள புண்ணியத்தலங்களில் நான்கு தலங்களையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகின்றனர். அவை வடக்கே பத்ரிநாத், கிழக்கே ஜகந்நாத், மேற்கே துவாரகநாத், தெற்கே ராமநாதம். இவற்றுள் ராமநாதர் கோவில் மட்டுமே சிவ தலமாகும். மற்ற மூன்றும் வைணவத் தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதர் கோவில் மூலவரை வழிபடுவதும், அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுவதும் ஒவ்வொரு இந்தும், தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது.

தல வரலாறு

ராவணனை வதம் செய்த பிறகு, சீதையை மீட்டுக்கொண்டு புறப்பட்டார் ராமபிரான். ஆனால் ராவணனை வதம் செய்ததால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோ‌ஷம் ஏற்பட்டது. அந்த தோ‌ஷம் நீங்குவதற்காக ராமர், சிவபெருமானை வழிபட எண்ணினார். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் ராமேஸ்வரம் திருத்தலமாகும். அந்தக் கடற்கரைப் பகுதியில் சிவபெருமானை வழிபட தீர்மானித்த ராமர், அனுமனிடம் சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறி காசிக்கு அனுப்பினார்.

சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால், சீதாதேவி கடற் கரையில் உள்ள மணலிலேயே ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். ராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்றார். தனது வாலின் வலிமையைக் கொண்டு, ராமபிரான் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்றார். அதில் அனுமனுக்கு தோல்வியே கிடைத்தது. மணல் லிங்கமானது, இறுகிய பாறை போன்று உறுதியாக நின்றது கண்டு அனுமன் ஆச்சரியம் அடைந்தார்.

அனுமனை சமாதானப்படுத்திய ராமபிரான், அவர் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதல் பூஜை நடைபெறும்  என்றும் உறுதியளித்தார்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்திற்கு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் ‘காசி விசுவநாதர்’ என்ற பெயர்பெற்று விளங்குகிறது. இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. ராமனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட லிங்கம் ‘ராமநாதர்’ என்று வழங்கப்    படுகிறார். இதுவே ஜோதிர்லிங்க மூர்த்தியாகவும் திகழ்கிறது.

வடக்கே உள்ள காசியும், தெற்கே உள்ள ராமேஸ்வரமும் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள், ராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைவதாக நம்பிக்கை.

கோவில் அமைப்பு

ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோவில், சுமார் 15 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் வாசல்கள் இருந்தாலும், வடக்கு, தெற்கு வாசல்கள் உபயோகத்தில் இல்லை. கிழக்கு கோபுரம் 126 அடி உயரமும், மேற்கு கோபுரம் 78 அடி உயரமும் கொண்டது.  ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர், பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் தனித்தனி விமானம் கொண்ட கருவறையில் வீற்றிருக்கின்றனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கரின், லிங்கத் திருமேனியில் இப்போதும் அனுமனின் வால் தடம் இருப்பதை காணலாம்.

ராமநாதர் சன்னிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சன்னிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. பர்வதவர்த்தினி அம்பாளின் சன்னிதி, ராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. இதற்கு வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி வீற்றிருக்கிறார்.

ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சன்னிதி இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னிதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடை பெறும். இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது ‘சேதுபீடம்’ ஆகும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்றது இது. இதன் நேர்த்தி வேறு எந்த ஆலயங்களிலும் கிடையாது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னிதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னிதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

Next Story