இறைவனை நமஸ்கரிக்கும் முறை


இறைவனை நமஸ்கரிக்கும் முறை
x
தினத்தந்தி 28 Feb 2017 3:15 AM GMT (Updated: 27 Feb 2017 12:50 PM GMT)

இறைவனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவனை வணங்கும் போது மூன்று வழிகளை பின்பற்றி வணங்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

றைவனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவனை வணங்கும் போது மூன்று வழிகளை பின்பற்றி வணங்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. அவை உத்தம நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் ஆகியவை ஆகும். இதில் உத்தம நமஸ்காரத்தை அனைவரும் செய்யலாம். ஆனால் அஷ்டாங்க நமஸ்காரம் என்பது ஆண்களுக்கான வழிபாட்டு முறை. அதே போல் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது பெண்களுக்கான முறையாகும்.

உத்தம நமஸ்காரம்

லட்சுமி வாசம் செய்யும் வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார நினைத்து வணங்க வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.

அஷ்டாங்க நமஸ்காரம்

இந்த வகை நமஸ்கார முறை ஆண்களுக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்ட அங்கங்களும் (அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள். அங்கம் என்பது உடல் பாகங்களைக் குறிக்கும்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணக்கம் தெரிவிக்கும் முறை. தலை, மார்பு, இரண்டு கரங்கள், இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனி ஆகிய உடற்பாகங்கள் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, இறைவனின் திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

பஞ்சாங்க நமஸ்காரம்

இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணக்கங்களில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற் பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாத நுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கினால் நன்மைகள் வந்து சேரும்.

Next Story