லட்சுமி வாசம் செய்யும் இடங்கள்


லட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
x
தினத்தந்தி 28 Feb 2017 3:30 AM GMT (Updated: 27 Feb 2017 12:58 PM GMT)

திருப்பாற்கடலை கடைந்த போது, கடலில் இருந்து தோன்றியவள் லட்சுமிதேவி.

திருப்பாற்கடலை கடைந்த போது, கடலில் இருந்து தோன்றியவள் லட்சுமிதேவி. திருமகள் என்னும் பெயர் கொண்ட அவளை, திருமால் மணம் செய்து தன் நெஞ்சத்தோடு வைத்துக்கொண்டார்.

இந்த லட்சுமி தேவியானவள் பல இடங்கள் வாசம் செய்கிறாள். வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறார். இந்த வில்வ மரமானது திருமகளின் கரத்தில் இருந்து தோன்றியதாக வாமன புராணம் கூறுகிறது. எனவே லட்சுமி தேவியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிப்பது விசே‌ஷமானது. வில்வத்தைக் கொண்டு லட்சுமியை அர்ச்சிக்கும்போது, அதன் தளப் பகுதி முன்பு இருக்கும்படி பூஜிக்க வேண்டும். ஏனெனில் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரம் தான். திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு, வில்வ இலை கொண்டுதான் அர்ச்சனை செய்யப்படுகிறது. வில்வ மரத்தை வலம் வந்து வழிபடுவது லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்களின் வடிவம். இப்படிப்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே, லட்சுமியின் சொரூபமாக விளங்குகிறது என்கிறது புராணம்.

நெல்லி மரத்தை ‘ஹரி பலம்’ என்று கூறுவார்கள். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள். ஒரு அந்தணன், மகாலட்சுமிக்கு உகந்த நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த காரணத்தால், வைகுண்ட பதவியை பெற்றான். இதே போல் ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனியை பிட்சையாக வழங்கிய பெண்ணின் வறுமை நீங்கி பெரும் செல்வம் சேர்ந்ததை புராணக் கதை ஒன்று எடுத்துரைக்கிறது. குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாட்டால், குபேர சம்பத்தைக் கொடுக்கும்.

சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்களப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் இதயங்களிலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் லட்சுமி தேவி வாசம் புரிகிறாள்.

மஞ்சளிலும் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த நீர், மஞ்சள் பூசிய மாங்கல்ய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது. பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம், பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவார்கள். வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், திருமகளும் வாசம் செய்கின்றனர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும், ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது சிறப்பு. ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

துளசி செடியில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். சாமந்திப் பூ, தாழம்பூ, தாமரை மலர் கொண்டும் லட்சுமியை அர்ச்சிக்கலாம். தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள் பக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  

இல்லங்களை லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் லட்சுமிதேவி நம்முடனேயே வாசம் செய்வாள். அதிகாலையில் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாசலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கோலம் போடும் பழக்கம் என்பது பண்டுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வண்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது. புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அந்தக் கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி தீப மங்கள ஜோதியாக விளங்குகிறாள் என்பதே இது போன்ற அலங்கரிப்புகளுக்கு காரணம். இல்லத்தில் ஏற்றப்படும் விளக்கு தீபத்திலும் லட்சுமி தேவி நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறாள்.

Next Story