நற்செய்தி சிந்தனை : நோன்பும் தர்மமும்


நற்செய்தி சிந்தனை : நோன்பும் தர்மமும்
x
தினத்தந்தி 7 March 2017 9:35 AM GMT (Updated: 7 March 2017 9:35 AM GMT)

தர்மம் செய்யும்பொழுது எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்பதை இயேசு பிரான் கூறுவதில் இருந்து உணரலாம்.

ந்த வாரம் மத்தேயு எழுதிய நற்செய்தியைப் பற்றி ஆராய்வோம்.

தர்மம் செய்யும்பொழுது எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்பதை இயேசு பிரான் கூறுவதில் இருந்து உணரலாம்.

‘எல்லோரும் நம்மைப் பார்க்க வேண்டும் என்று தர்மம் செய்யாதீர்கள். எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் வானுலகத் தந்தையிடம் இருந்து உங்களுக்கு எந்தவிதக் கை மாறும் கிடைக்காது. நீங்கள் பிறருக்குக் கொடுக்கும்பொழுது, தம்பட்டம் அடித்து, தற்பெருமையாய் நடந்து கொள்ள வேண்டாம். வெளிவேடக்காரர்கள்தான், பிறர் தங்களைப் புகழ வேண்டும் என்று, தொழுகைக் கூடாரங்களிலும், சந்துகளிலும் நின்று, அவ்விதம் செய்வார்கள். அப்படிச் செய்யக் கூடாது’.

‘நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்களுடைய வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாமல் இருக்கட்டும். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் தர்மம் மறைவாக இருக்கும். மறைவாய் உள்ளதைக் காணுகிற உங்கள் தந்தையும், உங்களுக்குக் கைம்மாறு அளிக்கத் தவற மாட்டார்’.

வெளி வேடக்காரர்கள், மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருக்கிறார்கள்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, உங்களின் உள்ளறைக்குள் செல்லுங்கள். கதவைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். மறைவாக இருக்கும் உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மன்றாடுங்கள். அவரும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பிருக்கும் பொழுது, வெளிவேடக் காரர்களைப்போல, வாட்டமான முகத்துடன் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பது வெளியே தெரிய வேண்டும் என்று வெளிவேடக்காரர்கள் எண்ணுகிறார்கள். அதற்காகத் தங்கள் முகங்களை விகாரமாக்கிக் கொள்கிறார்கள்.

நீங்கள் நோன்பை மேற்கொள்ளும்பொழுது, உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். முகத்தைக் கழுவி சுத்தம் செய்து விடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும், உங்களின் மறைவான தந்தையும் தகுந்த கைம்மாறை அளித்து உங்களை மகிமைப்படுத்துவார்.

இயேசு பிரானின் இப்போதனையை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த உலகில் தர்மம் செய்வோர் எவ்வளவு ஆடம்பரமாகச் செய்கிறார்கள் என்பதை நாம் அறிகிறோம். இயேசு பிரான் இப்படிப்பட்ட தர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது மாசற்ற பார்வையில் இவை மாசு உடையதாகத் தெரிகின்றன.

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்று கூறுகிறார். அந்த அளவுக்கு ரகசியம் இருக்க வேண்டும் என்கிறார். இதை விட எளிமையாக இயல்பாக யாரும் சொல்லி விட முடியாது.

அதைப்போல ‘நோன்பு’ இருக்கும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார். வெளிவேடம், மனிதருக்குள் இயல்பாக வெளிப்படுவது. நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு சதவீதம் பேர் மட்டும்தான் உணர்ந்து செயல்படுகிறார்கள்.

நோன்பு இருக்கும்போது முக வாட்டத்துடன் இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வது; பிறர் காண வேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்வது என்பதெல்லாம், வெளிவேடக்காரர்களின் செயல்பாடுகள் ஆகும்.

விண்ணுலகத் தந்தை எதை விரும்புகிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். இருவேறுபட்டவர்களுக்கு இருவேறுவிதமான கைம்மாறுதான் கிடைக்கும். ‘எதை ஒருவன் விதைக் கிறானோ அதைத்தான் அறுவடை செய்வான்’ என்பதைப்போலவும், ஜீவியம் எப்படியோ அப்படித்தான் மரணமும் என்பதைப் போலவும் உணர்ந்து தெளிந்து செயல்பட வேண்டும்.

‘தம்பட்டம்’ என்ற ஒரு வார்த்தையை, இயேசு பிரான் பயன்படுத்துகிறார். தற்பெருமையாகப் பேசி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல் என்பதுதான் இதன் பொருள். தன்னைத் தானே பீற்றிக் கொள்ளுதல் என்று பேச்சுவழக்கில் சொல்வதை இன்றும் கேட்கலாம்.

இந்த நற்செய்தியில் மூன்றுவிதமான செயல்பாடுகளைப் பற்றிக் கூறுகிறார்.

‘எல்லோரும் புகழ வேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்யாதீர்கள். தர்மம் என்பது பிறரின் புகழைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இருக்கக் கூடாது. இது முற்றிலும் ‘வெளிவேடம்’ ஆகும். வெளிப்பகட்டும், ஆடம்பரமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உன்னதமான ஒன்று அல்ல. வெளிவேடக் காரர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’ என்று நம்மை எச்சரிக்கிறார். வெளிவேடக்காரர்கள் நம்பத்தகுந்த வரும் அல்லர்.

தர்மம் கொடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. கை வழியாகத்தான் தர்மம் செய்கிறோம். இரு கைகளை இறைவன் அருளால் பெற்ற நாம் ஒரு கையால் அதிலும் குறிப்பாக வலக் கரத்தால் வழங்குவது, இடக்கரத்திற்குத் தெரியக்கூடாது என்கிறார். இந்த அளவுக்கு ரகசியம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயேசு பிரான், வெளிவேடக்காரர்களை எப்படி ஏற்றுக்கொள்வார்?

தங்களைத் தாங்களே உணர்ந்து நல்வழியில் நடப்பதற்கும், நல்லொழுக்கத்தைப் பேணி இறைவனை நாடுவதற்குமே நோன்பு நோற்கிறோம்.

அத்தகைய நோன்பை எப்படி ஏற்க வேண்டும்? அதைப் பிறருக்குக் காட்டிக் கொண்டு பெருமையாக இருக்கக் கூடாது. எப்போதும் போல இயல்பாக இருக்க வேண்டும். தனக்காகவும், இறைவனுக்காகவும் செய்கின்ற காரியங்களைப் பிரபல்யப் படுத்த வேண்டியதில்லை. இந்தக் கருத்துகளையும் நம் சிந்தனையில் தேக்கி ஒழுக வேண்டும்.

வெளிவேடக்காரர்களைப் போல் இல்லாமல் நம்மை நாமே சோதித்துப் பார்த்து, இயேசு பிரானின் போதனைப்படி நடந்தால் இவ்வுலகில் வெற்றி பெற்றவர்களாகவும், விண்ணுக்குத் தகுதி யானவர்களாகவும் ஆவோம் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story