நினைத்ததை நடத்திவைக்கும் ஒப்பிலியப்பன்


நினைத்ததை நடத்திவைக்கும் ஒப்பிலியப்பன்
x
தினத்தந்தி 9 March 2017 11:45 PM GMT (Updated: 9 March 2017 10:06 AM GMT)

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13–வது திவ்ய தேசமாகும்.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13–வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன். மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து நித்யவாசம் செய்வதால், ‘மார்க்கண்டேய ஷேத்திரம்’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துழாய்காட்டில் பூமாதேவி இங்கு அவதரித்ததால் துளசி வனம் என்ற பெயரும் உண்டு.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர். மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து கன்னிகா தானம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல பெருமாள், நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களுடன் காட்சியளித்துள்ளார்.

இந்த ஆலயத்தில் உப்பு இல்லாமலேயே பெருமாளுக்கு சகல நைவேத்தியமும் செய்யப்படுகிறது. உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சன்னிதிக்கு அப்புறம் ஒருவரும் கொண்டு செல்லக்கூடாது. அதனாலேயே இந்த பெருமாளுக்கு உப்பை விலக்கிய பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் தனியாக தாயாருக்கு சன்னிதி கிடையாது. பெருமாளுக்கு பக்கத்தில் பூமி நாச்சியார் மட்டுமே இருக்கிறார். பூமி நாச்சியாரை பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக ஆஸ்தானத்தை விட்டு எழுந்தருளும் வழக்கம் கிடையாது.

தல வரலாறு

மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு லட்சுமி தேவியை தனது மகளாகவும், நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துளாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், பெரிய பிராட்டியை நோக்கி ‘தேவி! நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு. தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்’ என்றார். அதன்படி லட்சுமி தேவி சிறு குழந்தையாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்தக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்ததும், அவருக்கு திருமணம் செய்து வைக்க தக்க மணமகனைத் தேடினார். அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத் தீர்மானித்தார்.

வயோதிக வடிவம் பூண்டு கந்தலான ஆடையை உடுத்திக்கொண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார் நாராயணர். அவரை வணங்கி வரவேற்ற முனிவர், ‘தாங்கள் விரும்புவது யாது?’ எனக் கேட்டார்.

அதற்கு முதியவர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன். வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன். மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை. தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்’ என்றார்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட முனிவர் ‘இதற்கு நான் உடன்பட மாட்டேன்’ என்று உறுதியுடன் கூறி விட்டார்.

ஆனால் முதியவரோ ‘தங்கள் மகளை திருமணம் செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை விடுவேன்’ என்றார்.

செய்வதறியாது திகைத்த முனிவர் தனது மகளிடம் சென்று நடந்ததை விளக்கினார். அதற்கு அவள், ‘வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன். வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன்’ என்றாள்.

மன கலக்கமடைந்த மார்க்கண்டேயர், பகவானை சரண் அடைந்தார். பகவான் தனது நாடகத்தை முடித்து அவர் முன்பு மகாவிஷ்ணுவாக காட்சி அளித்தார். ‘முனிவரே! உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும். உமது மகள் சிறு பெண்ணாதலால் உப்பை சரியான விகிதத்தில் சேர்க்க முடியாது என்று கூறினீர். ஆதலால் இந்த தலத்தில் யாம் உப்பை மறுத்தோம். உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம் படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும் எனது அருளை பரி பூரணமாக பெறுவர். உமது மகளை எனக்கு மணம் செய்து தருவீராக’ என்றார்.

இதைகேட்டு மகிழ்ந்த முனிவர், ‘பரந்தாமனே! எனது புதல்வியை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்பற்ற உனது உணவு பக்தருக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்’ என்ற வரங்களை கேட்டார். பெருமானும் அவர் கேட்ட வரங்களை வழங்கி அருளினார்.

திருமால் பூமாதேவியை பிரம்மன் முன்னிலையில் தேவர்கள் அனைவரும் கூடி நிற்க இந்த துளசி வனத்தில் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ளது அஹோத்ர புஷ்கரணி என்ற பொய்கை. வத தேவ சர்மா என்ற அந்தணர், ஜைமினி முனிவரின் சாபம் பெற்று பறவையாக இங்குள்ள மரத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் புயல் காற்றில் மரக்கிளை முறிந்து, இந்த பொய்கையில் விழுந்ததில் அவரது சாபம் நீங்கியது. இந்த பொய்கையின் முற்புறத்தில் உள்ள துளசி செடியின் அடியில் அமர்ந்து பிறருக்கு அன்னமளிப்பவன் தனது சாபங்கள் அனைத்தும் நீங்கப்பெறுகிறான். செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.

ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோ‌ஷத்தில் இருந்து விடுபடு            கிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.

சிரவண விரதம்

ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.

எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோணதினத்தன்று பகல் 12 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தார். இதனை ஒன்பது நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடுகிறார்கள். தவிர ராம நவமி உற்சவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பெருமாள் பூமாதேவியை ஐப்பசி மாதம் திருவோண தினத்தன்று மணந்து கொண்டார். ஆண்டு தோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆடியில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி திருவோணத்தில் பவித்திர உற்சவம், புரட்டாசியில் பிரம்மோற்சவம், மார்கழியில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம், தை மாதம் தெப்போற்சவம் நடைபெறும்.

கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.

–உவரிலிங்கம்.

பிரம்மனுக்கு திருமால் அனுப்பிய திருமண பத்திரிகை

பூமாதேவியை திருமணம் செய்யமுடிவு செய்த ஒப்பிலியப்பன், அதற்கான திருமண பத்திரிகையை கருடனிடம் கொடுத்து, சத்திய லோகம் சென்று பிரம்மனிடம் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார். கருடனும், சத்தியலோகம் சென்று பிரம்மனை சந்தித்தார். எம் பெருமானுக்கும், பூமாதேவிக்கும் மார்க்கண்டேய ஷேத்திரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. நீங்கள், இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் வந்து திருமணத்தை சிறப்புற நடத்தி தர வேண்டும் எனக்கூறி திருமண பத்திரிகையை கொடுத்தார். இதைக்கேட்ட பிரம்மன் மகிழ்ச்சி பொங்க அதனை பணிவுடன் பெற்று தலையில் வைத்து தேவர்களுக்கு எதிரில் பத்திரிகையை படித்தார்.

அதில் இடம் பெற்ற வாசகம் வருமாறு:–

மங்களம்.. பிரம்மனே! தேவர்களுக்கு தலைவனாய், நாமகளுக்கு நாயகனான உனக்கு நாராயணன் எனப் பெயர் பூண்ட யான் மனமார வாழ்த்து கூறுகிறேன். யான் எப்பொழுதும் நலமுடன் இருக்கிறேன். நீயும் அங்ஙனமே இருப்பாயென நம்புகிறேன். திருமகள் பூமாதேவி என்ற  பெயருடன் பூவுலகில் துளசி வனத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு பெண்ணாகப் பிறந்துள்ளார். அம்முனிவர் என்னை மருமகனாகப் பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தார். யானும் அதற்கிணங்கி வருகிற ஐப்பசி மாதத்து திருவோண திரு நட்சத்திரத்தில் பூமாதேவியை மணம் புரிந்து கொள்ள நிச்சயித்திருக்கிறேன். நீ எல்லா தேவர்களுடனும் துளசி வனத்துக்கு வந்து திருமணத்தை நடத்தி மணமக்களைக் கண்டுகளித்து ஷேமமாய் உறைவிடம் சேர்வாயாக.

நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கவும், அடியார்களுக்கு அருளவும் யுகந்தோறும் இந் நிலவுலகில் அவதரிப்பேன்.

இங்ஙனம்,

உன்னிடம் அன்புள்ள
திருமகள் நாயகன்,
துளசி வனம்.

Next Story