கங்காபுரம் டெக்ஸ்வேலியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


கங்காபுரம் டெக்ஸ்வேலியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 March 2017 11:00 PM GMT (Updated: 9 March 2017 10:59 PM GMT)

கங்காபுரம் டெக்ஸ்வேலியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு,

ஈரோடு அருகே கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு முன்னணி நிறுவன ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக கடை அமைத்து உள்ளனர். இதேபோல் தினசரி ஜவுளிச்சந்தையும், வார ஜவுளிச்சந்தையும் நடத்தப்பட்டு வருகிறது. சில்லரை வியாபாரம் மட்டுமின்றி மொத்த வியாபாரமும் நடத்தப்படுவதால் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஜவுளிகளை வாங்கி செல்கிறார்கள்.

இந்தநிலையில் டெக்ஸ்வேலி வளாகத்தில் செல்வ விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல் கால யாகபூஜையும், நேற்று காலையில் 2–ம் கால யாகபூஜையும் நடந்தது.

கும்பாபிஷேகம்

காலை 9.45 மணி அளவில் எஸ்.செல்வகணபதி சிவாச்சாரியார் யாக சாலையில் உள்ள புனிதநீரை எடுத்துக்கொண்டு கோவிலின் கோபுரத்திற்கு சென்றார். அங்கு கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் டெக்ஸ்வேலி தலைவர் பெரியசாமி, நிர்வாக இயக்குனர் ராஜசேகர், இயக்குனர் டி.பி.குமார், பொதுமேலாளர் கலியமூர்த்தி, தனலட்சுமி பெரியசாமி, உமா ராஜசேகர், ரூபா குமார், சித்தார் மூர்த்தி மற்றும் டெக்ஸ்வேலி நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



Next Story