துன்பங்களை நீக்கும் வீரபத்திரர்


துன்பங்களை நீக்கும் வீரபத்திரர்
x
தினத்தந்தி 21 March 2017 10:35 AM GMT (Updated: 21 March 2017 10:35 AM GMT)

பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலை பெருக்க பத்து புதல்வர்களை பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன்.

பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலை பெருக்க பத்து புதல்வர்களை பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன். இவன் சிவபெருமானைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாக தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றவன். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது.

அந்த வரத்தின் படி இமயமலை சாரலில் காலிந்தி நதியில் ஒரு வலம்புரி சங்கு உருவில் தவம் புரிந்து கொண்டிருந்த உமா தேவியை தட்சன் கண்டான். அவன் அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம் சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமா தேவி.

அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயரை சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது ஆறாவது வயது முதலே சிவ பெருமானை தனது கணவனாய் அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து சிவபெருமானைக் குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள். அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் கூடிய விரைவில் அவளை மணம்புரிவதாய்க் கூறி மறைந்தார்.

அவர் கூறியது போல தட்சன் கன்னிகா தான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார். அதனால் கடும் கோபம் கொண்ட தட்சன் சிவனை கொடிய வார்த்தைகளால் தூற்றினான். பின்னர் உமா தேவி முன்னிலும் கடுமையான தவம் புரிந்ததால் மனம் இளகிய சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு மறைந்தார்.

இதனைக் கண்ட சேடிப் பெண்கள் நடந்தவற்றை தட்சனிடம் சென்று உரைத்தனர். தந்தையரான தனக்குத் தெரியாமல் தனது மகளை களவு கொண்டவன் என்றும் தம் குலத்திற்கே இழிவைத் தேடியவன் என்றும் சிவபெருமானை பலவாறாக இகழ்ந்தான் தட்சன்.

பின் ஒரு சமயம், அவன் தனது மகளைக் காண கயிலையங்கிரிக்கு சென்ற போது வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்த பூத கணங்கள் அவனை உள்ளே செல்லவிடாமல் சிவபெருமானை இகழ்ந்தக் காரணத்தால் தடுத்தனர். அதனால் கோபம் கொண்ட தட்சன் தன் இடத்திற்கு திரும்பினான்.

தட்சன் செய்த யாகம்

பின்னர் ஒரு சமயம் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில் வேள்விச் சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றை நடத்த தீர்மானித்த அவன் கனகாதியர் நால்வர, சப்த ரிஷிகள் மற்றும் கின்னர், கிம்புருட, அசுரர் ஆகியோரை அழைத்துவிட்டு சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான். 

தந்தை தட்சன் செய்யும் யாகத்தினை நாரத முனி மூலம் கேள்வியுற்ற தாட்சாயணி அவனது தவறை எடுத்துக் கூறி திருத்தும் நோக்குடன் சிவபெருமானிடம் மன்றாடி அனுமதி பெற்றுக் கொண்டு வேள்விச் சாலையை அடைந்தாள். அவளைக் கண்டதும் கோபம் தலைக்கேற கொடிய வார்த்தைகளால் இகழ்ந்தான் தட்சன்.

இதனால் கோபம் அடைந்த தேவி கயிலைக்கு திரும்பினாள். தட்சனுக்கு அறிவு புகட்டும் வகையில் அந்த வேள்வியை அழிக்கும் படி சிவபெருமானிடம் வேண்டினாள். நீண்ட நேர சிந்தனைக்கு பின் தட்சனது யாகத்தை அழிக்க ஒப்புக்கொண்டார் இறைவன்.

அவரது கண்டத்திலிருந்த கருத்த வி‌ஷத்தின் ஒரு கூறு அவரது நெற்றிக் கண் வழியாக குமாரனாக வெளிபட்டது. அந்தக் குமாரன் ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றிற்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றிக் கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந்திருந்தான். சிங்கமுகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பாலான கச்சம் அணிந்திருந்தான். அவனே வீரபத்திரன்!.

சிவபெருமானின் மகனான வீரபத்திரனின் மனைவி பராசக்தியால் உருவாக்கப்பட்டவள் பத்ரகாளி. இவ்விருவரும் தட்சனின் யாகத்தை அழித்தனர்.

ஆலய அமைப்பு

வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இரு துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்க அடுத்துள்ள கருவறையின் முகப்பில் இடது புறம் விநாயகரும் வலது புறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

உள்ளே கருவறையில் இறைவன் அருள்மிகு வீரபத்திரசுவாமி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுளாகவும் இருப்பினும் இவருக்கு மட்டுமே வெற்றிலை படல் உற்சவமும் வெற்றிலை படலும் உரியனவாக உள்ளன.

இவரது ஆலயங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது.

வழிபாடுகள்

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம் மகாஷ்டமி விரதம். இது வீரபத்திரரையும் பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும் வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். வெற்றிலை மாலை சூட்டி அர்ச்சனை செய்து இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைபெறும்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் மேற்கு ராஜ கோபுரத்திற்கு அருகே உள்ளது இந்த ஆலயம்.

Next Story