4. வூடூவின் திகில் நடனம்!


4. வூடூவின் திகில் நடனம்!
x
தினத்தந்தி 28 March 2017 1:00 AM GMT (Updated: 27 March 2017 12:43 PM GMT)

வூடூ வழிபாட்டுச் சடங்கில் தேவதைகளுக்கான சின்னங்கள் மட்டுமல்லாமல் அதற்கான மந்திரங்களும் மிக முக்கியம்.

வூடூ வழிபாட்டுச் சடங்கில் தேவதைகளுக்கான சின்னங்கள் மட்டுமல்லாமல் அதற்கான மந்திரங்களும் மிக முக்கியம். அந்த வழிபாட்டை முன்னின்று நடத்தும் குரு, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம் என்றாலும், அதிகமாக இருப்பது பெண்கள்தான். வழிபாட்டை நடத்தும் குருவாவது எளிதல்ல. ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எல்லாமே, போகப் போக கட்டுக்கடங்காமல் போகலாம். அப்போது அதற்குத் தகுந்தபடி வழிபாட்டை முன்னோக்கி நடத்திச் செல்வதற்கு நல்ல பாண்டித்தியம் தேவை. ஆகையால் பல காலப் பயிற்சிகளுக்கும், அனுபவங்களுக்கும் பின்னர் மட்டுமே குரு என்ற தகுதி வழங்கப்படுகிறது. வூடூ சடங்கை நடத்தும் பெண்மணி ‘வூடூ ராணி’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்பத்தில் தேவதைகளை வரவழைக்கும் பாடல்களைப் பாடியபடி, இரு கைகளை பக்கவாட்டில் நீட்டி குருவானவர் அசைக்கும் காட்சியானது, காற்றில் மரக்கிளைகள் ஆடுவது போன்ற லயத்தோடு இருக்கும். அமானுஷ்ய சக்திகளை வரவழைப்பதும், அவர்களிடம் கோரிக்கைகள் வைப்பதும், பதில்களும், ஆலோசனைகள் பெறுவதும் இவருடைய பொறுப்பே. அதனால் இவர், அமானுஷ்ய சக்திகள் குறியீடுகளோடு ஏதாவது சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் அளவு பாண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும். புரியாதவற்றை அந்தந்த நேரத்திலேயே கேட்டுத் தெளிவு பெறும் வேகமும் விவேகமும் படைத்தவராகவும் இவர் இருக்க வேண்டும்.

வழிபாட்டில் மத்தள ஒலிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. மேலான சக்திகளுடன் தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் குறிப்பிட்ட தாள லயத்தோடு அது இருத்தல் வேண்டும். நடனம் ஆடுபவர்களும் அந்த தாள லயத்தோடு இணைந்து ஆட வேண்டும். அந்த நடனத்தில் ஒருவன் மீது அமானுஷ்ய சக்தி குறிப்பிட்ட நேரம் ஆட்சி செலுத்தும். அந்த சக்தியை உணரும் கூர் உணர்வையும், அதை அந்த குறிப்பிட்ட காலம் தாங்கிக் கொள்ளும் வலிமையும் அவன் பெற்றிருக்க வேண்டும். அவனை ‘குதிரை’ என்றழைக்கிறார்கள். அமானுஷ்ய சக்தி அவன் மீதமர்ந்து சவாரி செய்வதால், அந்தப் பெயரிட்டு அழைக்கின்றனர். அந்த அமானுஷ்ய சக்தி பெரும்பாலும் இறந்தவர் ஆவியாகவோ, ஆவிகளுக்கும் மேம்பட்ட ஒரு சக்தியாகவோ இருக்கிறது. அந்த ஆவி அல்லது சக்தி, தேவதைகளிடம் இருந்து பதில் அல்லது ஆலோசனை பெற்றுத் தருகிறது.

அமானுஷ்ய சக்தி ஒருவன் மீது குடியேற ஆரம்பிக்கும் போது, அந்த மனிதன் தன்னை முழுவதுமாக மறக்க ஆரம்பிக்கிறான். அவனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களும், சக்திகளும் முழுமையாக மறைந்து போய், அந்த ஆவி அல்லது சக்தியின் குணாதிசயங்களும், சக்திகளும் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. ஒரு 90 வயது முதியவர் மேல் ஆக்கிரமித்திருப்பது இளைஞனின் ஆவியாகவோ, ஆக்ரோ‌ஷ சக்தியாகவோ இருக்குமானால் அந்த முதியவரின்  உடல் முறுக்கேறி அவன் தோற்றத்திலும், குரலிலும், பேச்சிலும், செய்கைகளிலும் இளமையின் முறுக்கு தெளிவாகவேத் தெரியும். சாதாரணமாக அந்தக் முதியவருக்கு சாத்தியமாகவே இருக்காத செயல்களை எல்லாம் அந்த வேளையில் முதியவரால் சர்வ சாதாரணமாகச் செய்ய முடியும். வேகமாய் நடனமாடுவது, நீண்ட தூரங்களுக்குத் துள்ளிக் குதிப்பது எல்லாம் அந்த சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் வெகு இயல்பாக அந்த முதியவரால் செய்ய முடியும். மாறாக ஒரு இளைஞனின் வயதில் குடியேறுவது கிழ ஆவியாக இருக்குமானால் எல்லாமே தலைகீழாகி விடும். நகர்வது கூட மிக நிதானமாக இருக்கும். சிறிது நேரத்திலேயே களைப்பு மேலிடும். மூச்சு வாங்கும். பேச்சு பலவீனமாக வரும்.

இந்த நேரங்களில் தனக்கு என்ன நடக்கிறது என்பதோ, என்ன பேசினோம், என்ன கேட்டோம் என்பதோ அந்த ‘குதிரை’க்குத் தெரியாது. கடைசியில் மயங்கி விழும் அவனுக்கு விழிப்பு வரும் போது, நினைவில் எல்லாமே வெறுமையாக இருக்கும். அவன் மீது குடியேறிய சக்தி வலிமையானதாக இருந்தால் அவன் மயங்கி விழும் போது, அவன் உடலில் இருக்கும் இயல்பான சக்திகள் அனைத்தும் தீர்ந்து போயிருக்கும். அவன் விழிப்புணர்வு பெற்று பழைய நிலைக்குத் திரும்ப சில மணி நேரங்கள் ஆகலாம்.

இந்த வூடூ நடனம் முதன் முதலில் திரைப்படமாக எடுக்கப்பட்டது 1947–ல். அதை எடுத்தவர் மாயா டெரென் (Maya Deren) என்பவர். இவர் ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். திரைப்படம் எடுப்பவராக மட்டுமல்ல இவர் எழுத்தாளராகவும், நடனக்கலைஞராகவும் இருந்தார். வூடூவைப் பற்றி விரிவாகச் சொல்ல முடிந்த படைப்புகளில் இவருடைய பங்கு மிக முக்கியமானது.

இவர் கேதரைன் டன்ஹம் என்ற புகழ்பெற்ற நடனக்கலைஞரின் குழுவில் சில காலம் இருந்தார். அந்த நேரத்தில் கேதரைன் டன்ஹம் ஆப்பிரிக்க நடனங்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வூடூ நடனம் பற்றி அறியும் வாய்ப்பு மாயா டெரெனுக்குக் கிடைத்தது. தான் கேள்விப்பட்டதெல்லாம் மாயா டெரெனுக்கு சுவாரசியமாக இருந்தது. பின் சில திரைப்படங்கள் எடுக்கும் வேலைகளில் மும்முரமாக இருந்த மாயா டெரெனுக்கு குக்கன்ஹீம் பெல்லோஷிப்
(Guggenheim fellowship)
என்ற நிறுவனம் மூலமாக ஹைத்தி சென்று வூடூ பற்றி ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை அவர் நழுவ விடவில்லை.

1947–ம் ஆண்டு அவர் ஹைத்தி சென்று கண்ட முதல் வூடூ நடனம் அவரைக் காந்தமாகக் கவர்ந்தது. வூடூ நடனத்தில் ஆரம்பத்தில் பாடப்படும் லெக்பா தேவதை குறித்த பாட்டு ஆத்மார்த்த மாக இருந்தது.      

‘பாதையை எனக்காகத் திறப்பாய்
லெக்பா தேவதையே நான் கடந்து போக வேண்டும்.
கதவை எனக்காகத் திறப்பாய்
லெக்பா தந்தையே நான் இங்கு காத்திருக்கிறேன்.
கதவை எனக்காகத் திறப்பாய்
லெக்பா தலைவனே, நான் உள்ளே போக விரும்புகிறேன்’.


லெக்பா தேவதை தான் சூட்சும மேல் உலகத்திற்கான வாயிற் காவலாளி என்பதையும், அந்தத் தேவதை அனுமதி இன்றி யாரும் மேலுலகத்தில் உள்ள சக்திகளை அணுகவோ, உதவி பெறவோ முடியாது என்பதையும் முன்பே சொல்லி இருந்தோம். அந்தப் பாடல் முடிந்தவுடன் அங்கிருந்த சூழலில் ஒரு லேசான மாற்றத்தை மாயா டெரென் உணர்ந்தார்.  

அந்த சடங்கின் தொடர்ச்சியில் அக்வீ தேவதையும், தம்பல்லா என்ற நாக தேவதையும் வரும்படி வேண்டிக் கொள்ளப்பட்டன. தம்பல்லா தேவதையை வேண்டிய போதும், அதன் பின்னும் அங்கு நடனமாடியவர்கள் பாம்பு போலவே வளைந்தும் நெளிந்தும் ஆடினார்கள். அந்த சூழலில் தான் அமானுஷ்ய சக்திகளின் வரவை மாயா டெரென் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார்.

அதிலும் குறிப்பாக வூடூ நடனத்தில் ‘குதிரை’ என்று சொல்லப்படுபவன், தன் சுயநினைவை முற்றிலும் இழந்து, அமானுஷ்ய சக்தியால் பீடிக்கப்படும் அந்தக் கணம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது என்று கூறுகிறார். மனித சக்தியும், அமானுஷ்ய சக்தியும் ஒரு உடலில் ஒரு சேர இருக்கும் அந்தக் கணத்தில், இரண்டு உலகங்களும் சந்திக்கும் அந்தக் கணத்தில், எத்தனையோ ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்று அவருக்குத் தோன்றியது.

அந்த நடனத்தில் என்ன கேட்கப்பட்டது?, என்ன பெறப்பட்டது? என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. அந்தத் தகவல்கள் பழங்கால மொழியிலும், குறியீடுகளிலும் இருந்திருக்க வேண்டும் என்பதால், அவை நடனத்தை நடத்திய வூடூ ராணிக்கு மட்டுமே விளங்கியிருக்க வேண்டும். ஆனால் குதிரை ஏற்றம் நிறைவு பெற்றவுடன் உடல் துடிதுடிக்க ‘குதிரை’ என்றழைக்கப்படுபவன் மயங்கி விழுந்ததும், அதன் பின் எழுந்தவன் தன் பழைய சூழ்நிலையை உணரவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டதையும் மாயா டெரென் கவனிக்கத் தவறவில்லை.

அவருக்கு ஆவணப்படம் எடுக்கப் பணித்திருந்த நிறுவனம் அதை முடித்துக் கொடுக்க அவருக்குக் கொடுத்திருந்த காலம் மிகக்குறுகியது. அதற்குள் அந்த சடங்குகளைப் படம் பிடித்து முடித்து விட முடியும் என்ற போதும், வூடூவின் சூட்சுமப் பொருளைப் புரிந்து கொண்டு விட முடியாது என்பதால் அந்த நிறுவனத்தின் ஆவணப்படப் பொறுப்பில் இருந்து தன்னை மாயா டெரென் விடுவித்துக் கொண்டார். அவர் ஹைத்தியிலேயே மேலும் அதிக காலம் தங்கி வூடூ சூட்சுமங்களை அறிந்து கொண்டார். அவற்றை 1953–ம் ஆண்டு ‘தெய்வீக குதிரைக்காரர்கள்: ஹைத்தியின் வூடூ கடவுள்கள்’
(Divine Horsemen: The Voodoo Gods of Haiti)
  என்ற  நூலில் விரிவாக எழுதினார். அந்த நூல் மிகவும் பிரபலமாகியது.

அவர் அப்போது எடுத்த படச்சுருள்களை வைத்தும், அந்த நூலை அடிப்படையாக வைத்தும், அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது கணவர் டெய்ஜி இடொ (
Teiji Ito
) 1981–ம் ஆண்டு ஆவணப்படம் ஒன்றை எடுத்து முடித்தார். அந்த ஆவணப்படம் பழங்கால வூடூ குறித்து எடுக்கப்பட்ட முதல் காணொளி என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இனி அடுத்த வாரம் ஒரு சுவாரசியமான வூடூ ராணியைப் பற்றி பார்ப்போம்.

–தொடரும்.

Next Story