பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 1 Jun 2017 10:28 PM GMT (Updated: 1 Jun 2017 10:28 PM GMT)

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3–ம் படை வீடான பழனியில், தைப்பூசம், பங்குனிஉத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும். இதில் வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா வசந்த உற்சவம் என்று வர்ணிக்கப்படுகிறது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் முருகப்பெருமான் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா வில்வ வனம் என்று அழைக்கப்படும், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி–தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜையும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி–தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் விநாயகர் பூஜை, கொடி மரம் மற்றும் கொடி படத்துக்கு பூஜைகள் நடந்தன. அதையடுத்து காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு வேத விற்பனர்கள், ஓதுவார்கள் மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி–தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம்

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 6–ம் திருநாளான வருகிற 6–ந் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி–தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும், அடுத்த நாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் தினசரி மாலை 5.30 மணிக்கு மேல் மங்கலஇசை, பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், ஸ்ரீமது கொங்கு வைகாபுரி நாடு அமைப்பின் தலைவர் டாக்டர் ராமசாமி மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.


Next Story