15. உலகம் நிலையற்றது


15. உலகம் நிலையற்றது
x
தினத்தந்தி 7 Jun 2017 8:42 AM GMT (Updated: 7 Jun 2017 8:42 AM GMT)

மத்தேயு எழுதிய இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனிப்போம். இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமானதல்ல என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார்.

நற்செய்தி சிந்தனை

செம்பை சேவியர்

த்தேயு எழுதிய இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனிப்போம். இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமானதல்ல என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். இந்தச் செய்தி, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதற்குத் தக்கவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர் எத்தனை பேர்?

‘நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்

பெருமை உடைத்திவ் உலகு’ என்பது திருக்குறள்.

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை, உலகத்திற்கு இருக்கிறது என் கிறார் வள்ளுவப் பெருந்தகை. எப்படி?

நேற்று உயிரோடு இந்த உலகத்தில் இருந்தவன், இன்று இல்லை.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வதென்ன?

உலகத்தை வெற்றி கொள்வதாகச் சொல்லும் ஒருவனைப் பார்த்து, உன்னால் உலகத்தை வெற்றி கொள்ள முடியாது. அப்படி எண்ணினால் நீ தோற்று விடுவாய். உன்னை உலகம் வெற்றி கொண்டு விடும். நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்வதன் பொருள் இதுதான்.

நிரந்தரமில்லாத இந்த உலகத்தை நாடாதே என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த நற்செய்தி அருளப்படுகிறது.

அக்காலத்தில் இயேசு பிரான் தம் சீடரை நோக்கிக் கூறுகிறார்:

‘மண்ணுலகில் உங்களுக்கென்று செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்து விடும். திருடரும் அதை கன்னமிட்டு திருடுவர். அதனால் விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை. திருடரும் கன்னமிட்டு திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

கண் தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப்போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.

இந்த நற்செய்தியை மிகவும் ஆழமாகக் கவனித்துப் பாருங்கள். மண்ணுலகில் சேமித்து வைக்கப் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பயன் என்ன? என்ற வினாவைத் தொடுக்கிறார். பூச்சிகள் அழித்து விடுகின்றன. அதுமட்டுமா? திருடர்கள் நோட்டமிட்டுத் திருடி விடுகின்றனர்.

விண்ணுலகு என்பதைப் பற்றி உணர வேண்டுமானால், இறப்பிற்குப் பிறகுதான், அப்படி ஓர் உலகைக் காண முடியும். அங்கே சேமித்து வையுங்கள். எதை? நற்செயல் களால், நீங்கள் ஈட்டிய செய்கைகளை எல்லாம், சேமித்து வைக்க வேண்டிய இடம் அதுதான் என்கிறார். அங்கே சேர்த்து வைக்கும் செல்வம், பூச்சியால் அழியாது. திருடர்களும் திருட மாட்டார்கள். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும், நற்செயல்களால் நிரப்பப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று போதிக்கிறார்.

அடுத்து வரும் சிந்தனைகளை நுட்பமாகக் கவனியுங்கள்.

உடலிலே பல உறுப்புகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லா உறுப்புகளிலும் மிகவும் முக்கியமானது ‘கண்’ என்ற உறுப்பாகும். கண்தான் உடலுக்கு விளக்கு என்கிறார், இயேசு பிரான். உடல் முழுவதும் ஒளி பெற வேண்டுமானால் அதற்கு அடிப் படையான ‘கண்’ ஒளி பெற வேண்டும். அறிவு ஒளியைத்தான் இப்படிக் கூறுகிறார். அக்கண்ணானது கெட்டுப் போய் விட்டால், உடல் முழுவதும் இருளாகி விடும் என்கிறார்.

ஆகவே ஒளி தரும் கண்ணைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டும்.

புறக்கண் அற்றவர்களை எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இயேசு பிரான் சொல்வது கல்வி ஒளியை ஏற்றி அறியாமையை அகற்றி விடு என் பதுதான்.

அறியாமை என்பது ஒரு கொடிய நோய் ஆகும். ஆகவே அறியாமை என்ற நோயைக் களைய, அறிவு ஒளியை ஏற்றி வை என்பதுதான் அவருடைய அடிப்படைக் கொள்கையாகும். ஆகவே அறிவு ஒளி பெறுவோம், அறியாமை என்னும் இருளைப் போக்குவோம். நற்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்து சிந்தித்துப் பாருங்கள்.

இந்த நற்செய்தியில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன?

உலகத்தில் பிறந்த எந்த உயிரும் உலகை வெற்றி கொள்ள முடியாது. இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை மனிதராகப் பிறந்தவர்கள் உணராமல் இல்லை. உணர்ந்தாலும் உலக ஆசைகள், அவர்கள் வாழும்பொழுது விட்டபாடில்லை. தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதும், அதைப் பாதுகாக்கவும், பாதுகாப்பதற்கு மேலும் மேலும் செலவு செய்யவும் நாம் பாடு படுகிறோம். அதனால் என்ன பயன்? இவ்வுலகில் சேர்த்து வைக்கும் பொருள், பூச்சிகளாலும், துருக்களாலும் அழிக்கப்படுகிறது. திருடர்களும் சமயம் பார்த்து மொத்தமாகத் திருடிச் சென்று விடுகின்றனர். உங்கள் செல்வம் இருக்க வேண்டிய இடம் இவ்வுலகம் அன்று. விண்ணுலகம். அங்கே இப்படிப்பட்ட நிலை ஏற்படாது. நற்செயல்களால், நல்ல செல்வங் களைச் சேகரித்து மகிழுங்கள்.

எல்லா உறுப்புகளுக்கும் மேலானதாகக் ‘கண்’ எனும் உறுப்பு விளங்குகிறது. உடலுக்கு விளக்காக திகழ்கிறது. உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் நிலையை உருவாக்கும் கண்ணைப் பாதுகாப்பாய் வைக்க வேண்டும். அதனால் ஏற்படும் ஒளி, அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டுமானால், அகக்கண் பிரகாசிக்க வேண்டும். அகத்தால் ஏற்படும் பிரகாசம், அறியாமை என்ற இருளைப் போக்க வேண்டும். இவ்வுலகில் புறக்கண் அற்றவரும், நற்செயல்களால் ஒளி பெற்றவரே என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நற்செய்தி என்பது உலகம் உள்ளவரை, மனித சமுதாயம் இருக்கும் வரை, மக்களுக்கு நல்வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது.

(தொடரும்) 

Next Story