முக்தியை அருளும் சிவஜோதி தரிசனம்


முக்தியை அருளும் சிவஜோதி தரிசனம்
x
தினத்தந்தி 7 Jun 2017 12:32 PM GMT (Updated: 7 Jun 2017 12:32 PM GMT)

சிவபாத இருதயரின் மகனாக சைவமும், தமிழும் தழைக்க சீர்காழியில் அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு, சிவஞானம் பெற்றார்.

சிவபாத இருதயரின் மகனாக சைவமும், தமிழும் தழைக்க சீர்காழியில் அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதில் அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு, சிவஞானம் பெற்றார். ஈசனின் அருளால் அடியார்களுடன் சிவத்தலங்கள் பல சென்று பதிகம் பாடி, அற்புதங்கள் நிகழ்த்தினார். சிவபெருமானைப் போற்றிப் பாடி திருக்கோலக்கா திருத்தலத்தில் சம்பந்தர் பொற்றாளம் பெற்றார். பட்டீஸ்வரம் திருத்தலத்தில் முத்துப்பந்தல் பெற்றார். திருவாவடுதுறை திருத்தலத்தில் பொற்கிழி பெற்றார்.

திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றார். நஞ்சினால் இறந்த வணிகனை பதிகம் பாடி திருமருகல் திருத்தலத்தில் உயிர்ப்பித்தார். திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் அப்பர் பெருமானுடன் சேர்ந்து, திறக்காத அத்தலத்தின் கோவில் கதவை திறக்கவும், அடைக்கவும் செய்தார். திருவோத்தூர் திருத்தலத்தில் சம்பந்தர் ஆண் பனை மரத்தை, பெண் பனை மரமாக்கினார். சென்னை மயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவை எனும் பெண்ணை, அவளது அஸ்தி மற்றும் எலும்பை கொண்டு ஈசன் அருளால் உயிர்ப்பித்தார்.

இப்படி பல அற்புதங்களை நிகழ்த்திய திருஞானசம்பந்தருக்கு, அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் மறுத்த சம்பந்தர், பின் ‘ஈசனின் விளையாட்டு தான் இது’ என்று கருதி சம்மதித்தார். சீர்காழியிலிருந்து வடகிழக்கே எட்டு மைல் தொலைவிலுள்ள திருநல்லூரில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் மகள் தோத்திரப் பூர்ணாம்பிகையை மணம் பேசி முடித்தனர். பெருமணம் சிவாலயத்தில் வைத்து சம்பந்தருக்கு திருமணம் செய்ய முடிவானது. வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று பெருமணம் சிவாலயத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமண நாளும் வந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் சம்பந்தரின் உறவினர்களும், அடியவர்களும் ஒருங்கே திருநல்லூர் எனும் அந்த ஊரில் உள்ள பெருமணம் சிவாலயத்தில் திரண்டனர். அப்போது அன்னை உமையவள் அங்கு தோன்றி, சம்பந்தரின் திருமணம் காணவந்த அனைவருக்கும் திருநீறு அளித்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவேதான் இத்தல அம்பிகைக்கு ‘திருவெண்ணீற்று உமையம்மை’ என்னும் திருநாமம் வந்தது. இதன் பொருட்டே இன்றும் இத்தல அம்பிகை சன்னிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆச்சாள் எனும் அம்பிகையே சம்பந்தர் திரு மணத்திற்கு நேரில் வந்திருந்து அனைவருக்கும் திருநீறு வழங்கி அருளியதால் இத்தலம் அதுமுதல் ஆச்சாள்புரம் என வழங்கலாயிற்று. மணமேடையில் சம்பந்தரின் வலப் பாகத்தில் மணமகளை அமர வைத்தனர். சம்பந்தரின் திருமணக் கோலத்தை கண்டு அவையோர் மகிழ்ந்தனர். வேள்வி சடங்குகள் நடந்தன. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது, ‘இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்’ என்று கூறி, ‘கல்லூர்ப் பெருமணம்’ எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.

அப்போது அங்கு அசரீரி யாவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலித்தது. ‘சம்பந்தா! இப்போது கருவறையில் எமது லிங்கத்திருமேனியில் இருந்து பெருஞ்ஜோதி தோன்றும். அந்த ஜோதியில் யாம் ஒரு வாசலையும் அமைத்திருப்போம். அந்த வாசலின் வழியே நீயும், உம் திருமணம் காணவந்த அனைவரும் மற்றும் அடியவர்களும் சிவஜோதியில் புகுந்து எம்முள் கலந்திடுக’ என்றது. அப்போது கருவறை லிங்கம் பிளந்து அதில் இருந்து தோன்றிய சிவஜோதியைக் கண்டு சிலர் தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’ எனும் நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் கருவறையில் தோன்றிய சிவலிங்க ஜோதியில் புகுமாறு சொன்னார். அவரும் தனது மனைவியுடன் அந்த ஜோதியில் புகுந்தார்.

உடனே கருவறையில் ஜோதி மறைந்து பிளந்திருந்த சிவலிங்கம் முன்புபோல மீண்டும் ஒன்றாகியது. ஆம்! சம்பந்தர் மற்றும் அவரது திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இத்தல ஈசன், முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு சிவலோக தியாகேசர் என்னும் திருநாமம் வந்தது. இப்படி தம்முடைய சிவலிங்க பிளவுக்குள் சம்பந்தர், அவரது மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கிய லிங்கம், இன்றும் நமக்கு சிவலோக பதவி வழங்க காத்திருக்கிறது.

ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நன்னாளில் இத்தலத்தில் சம்பந்தர் திருமணமும், சம்பந்தர் சிவஜோதியில் கலக்கும் வைபவமும் வெகு சிறப்பாக நடக்கிறது. வைகாசி மூல நட்சத்திர நாளில் சம்பந்தரின் திருமண வைபவத்தில், காலை 7 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணமும் நடைபெறும். பின்பு அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடைபெறும். அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தர் சிவஜோதியில் கலத்தலை தரிசித்து பெரும் புண்ணிய பேறு பெறுவார்கள்.

பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டிகளை ஏற்றி தீபாராதனை செய்வார்கள். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இதைக் காண்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந் துள்ளது.

-சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம். 

Next Story