ஒளிமய வாழ்வை அருளும் புளியறை தட்சிணாமூர்த்தி


ஒளிமய வாழ்வை அருளும் புளியறை தட்சிணாமூர்த்தி
x
தினத்தந்தி 12 July 2017 9:32 AM GMT (Updated: 12 July 2017 9:32 AM GMT)

ஈசன், தான் எழுந்தருள விரும்பும் ஷேத்திரத்தில் நடத்தும் திருவிளையாடல்கள் மிகச்சிறப்பானவை. தில்லை நடராஜர், புளியறைக்கு வந்த விதமும் இப்படித்தான்.

மானுட வாழ்க்கையில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள குரு பகவான், “புளியறை” கிராமத்தில் அபூர்வ வடிவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் ஒரே தீபாராதனையில் மூன்று தெய்வங்களை தரிசனம் செய்யலாம். சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோவில் என்று அழைக்கப்படும் இந்த விசேஷ திருத்தலம், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

திரிகூடாசலம் வந்த தில்லை:

ஈசன், தான் எழுந்தருள விரும்பும் ஷேத்திரத்தில் நடத்தும் திருவிளையாடல்கள் மிகச்சிறப்பானவை. தில்லை நடராஜர், புளியறைக்கு வந்த விதமும் இப்படித்தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துவந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது. திடீரென நடராஜர் குடிகொண்டிருந்த சிதம்பரம் உள்ளிட்ட சோழ நாடும், பாண்டிய நாடும் சமணர்களின் ஆளுகைக்கு உள்ளானது. அப்போது நடராஜர் விக்ரகத்துக்கு பாதிப்பு எதுவும் நேர்ந்து விடக்கூடாதே என்றெண்ணிய சிவ பக்தர்கள், சிலையை எங்காவது அடர்ந்த காட்டுக்குள் மறைத்து வைக்க முடிவு செய்தனர். வளர்பிறை தொடங்கியதும் ஒரு நல்ல நாளில் ஐந்து சிவ பக்தர்கள், நடராஜர் சிலையை சுமந்து கொண்டு மனம்போன போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

பகலில் யார் கண்ணிலும் படாதவாறு தங்கிக்கொண்டு, இரவு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டனர். எங்கு தேடியும் பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை. இறுதியில் அவர்கள் வந்து சேர்ந்தது தென் திசையில் உள்ள திரிகூடாசலம் என்னும் மலைப்பகுதி. சேர நாட்டின் ஆரம்ப பகுதியான திரிகூடாசலம் பக்தர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கு திரும்பினாலும் ஓங்கி வளர்ந்த பசுமையான மரங்களுக்கிடையே பயணித்து அம்மலைக்கு தென் மேற்கில் மலைச்சாரலில் உள்ள வேணு வனத்தை அடைந்தனர். அவ்வனத்தில் பெரிய மலைகளும் அடர்ந்து நெருங்கி வானளாவி வளர்ந்த மூங்கில் பண்ணைகளும், புளிய மரங்களும் இருந்தன.

நடராஜர் சிலையை மறைத்து வைக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்தனர். மறைவுப் பகுதியைத் தேடியபோது, ஓரிடத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டு இடம் காட்டியது. அங்கே புளிய மரம் ஒன்றில் பெரிய பொந்து இருந்தது. அப்பொந்தினுள் நடராஜர் சிலையை வைத்து, இலை, தழைகளை வைத்து மூடி விட்டு, சிவ பக்தர்கள் ஐவரும் தில்லைக்குத் திரும்பிச் சென்றனர்.

சில நாட்கள் கழித்து, புளியந்தோப்பின் உரிமையாளரான செல்வந்தர் அங்கு வந்தார். அப்போது இலை, தழை அகன்று நடராஜர் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். தில்லை அம்பலம் தன் தோப்பில் எழுந்தருளி காட்சியளிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் செல்வந்தர். எனினும் அக் காலத்தில் நிலவிய மதச் சூழலை மனதில் கொண்டு, இதுபற்றி யாரிடமும் சொல்லாமல், இறைவனை தினமும் பூஜித்து வழிபட்டு வந்தார்.

வழிகாட்டிய ஈசன்:

காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது. சைவ சமயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆயினும் நடராஜர் இல்லாத அம்பலம் வெறிச்சோடிக் கிடந்தது. மீண்டும் எப்படியாவது தேடிக் கொண்டு வந்து அம்பலவாணனை ஆலயத்தில் சேர்க்க வேண்டும் என்று உறுதி பூண்டனர் பக்தர்கள். எனவே, தென்திசை நோக்கி நடராஜர் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்தேடி விரைந்தனர். பல ஊர்களைக் கடந்து திரிகூடாசலம் வந்தடைந்து அங்குள்ள கானகம் முழுவதும் தேடியும் எம்பெருமானைக் காணாது தவித்தனர். அப்போது வானிலிருந்து, ‘திரிகூடாசலத்திற்குப் பஸ்யம் திசையில் உள்ள வேணுவனம் செல்க’ என்று அசரீரி ஒலித்தது. அந்தக் காட்டிலிருந்து வேணுவனம் செல்லும் பாதை தெரியாமல் தயங்கி நின்றபோது மீண்டும் அசரீரி, ‘சாரை சாரையாகச் செல்லும் எறும்புத் தொடரைப் பின்பற்றுக’ என்று ஒலித்தது.

பக்தனுக்காக சுயம்பு:

மட்டில்லா மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அவ் விதமே எறும்புகளைப் பின்தொடர்ந்து வேணு வனம் அடைந்தனர். மிகுந்த சிரமப்பட்டு இறைவன் வீற்றிருந்த புளியமரத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். இறைவன் சிலையை எடுத்துக்கொண்டு தில்லையம்பதி திரும்பினர். சில நாட்கள் கழித்து செல்வந்தர் தன் தோப்புக்குச் சென்றார். ஆனால், அங்கு நடராஜர் இல்லாதது கண்டு வருந்திப் புலம்பினார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. செல்வந்தரின் பக்திக்கு மனமிளகிய ஈசன், திடீரென பூமிக்குள் இருந்து சிறியதொரு லிங்கமாகத் தோன்றினார்.

இதைக்கண்டு அளவிலா ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டார் செல்வந்தர். இந்தத் தகவல் எங்கும் காட்டுத்தீயாய் பரவியது. தீவிர சிவபக்தனான, அச்சன்குன்றம் பகுதி குறுநில சேர மன்னன் விரைந்து வந்து சுயம்பு லிங்கத்தை வழிபாடு செய்தான்.

அன்றிரவே மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் கோவில் அமைப்பாயாக. கோவிலின் முன்பு சடாமகுட தீர்த்தம் ஏற்படுத்து. 27 நட்சத்திரங்களையும் படிக்கட்டுகளாக அமைத்து, குரு பகவானை வலம் வந்து வழிபட ஏதுவாக கோவிலை உருவாக்கு’ என்று உத்தரவிட்டார். ஈசனின் ஆணைப்படியே கோவில் அமைத்து பெரும் பாக்கியசாலி ஆனான் மன்னன். புளியமரம் தல விருட்சமானது. ஊரும் ‘புளியறை’ எனப் பெயர் பெற்றது.

ருக் வேத சாஸ்திரப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. கொடிமரம் இருப்பதற்கு பதிலாக அந்த இடத்தில், குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சுயம்புலிங்கம், தட்சிணாமூர்த்தி, நந்தி மூவரும் ஒரே நேர்கோட்டில் வீற்றிருக்கின்றனர். இவ்விதம் அமைந்திருப்பது இந்தியாவிலேயே புளியறையில் மட்டும் தான். ஒரே தீபாராதனையில் மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசித்து அருள் பெறலாம்.

அபூர்வ தட்சிணாமூர்த்தி:

பேராற்றலுடன் தோன்றியிருக்கும் சுயம்பு லிங்கத்திடம் இருந்து அதீத ஆற்றலைப்பெற்று, அதனுடன் தன் அருளையும் சேர்த்து இரட்டிப்பாக பக்தர் களுக்கு வழங்குகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இவரின் பாதத்தில் ஒரே சதுரக்கல்லில் ஒன்பது ஆவர்த்த பீடம் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை கோவிலில் வழி படும் பக்தர்களின் குறைதீர வழிவகுப்பதோடு அவர்களின் வருங்காலமும் வளமோடு அமைய வரமளிக்கிறது. சுற்றுப் பிரகாரத்தில் ஒன்பது கன்னிமார் நதிகளாக இருந்து பக்தர் களின் பாவங்களைப் போக்கு வதாக ஐதீகம். இந்தக் கோவிலின் தென்மேற்கே சந்தான பாக்கியம் அருளும் நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது.

விரைவான பலன்கள்:

இத்தலத்தில் ஈசன் சுயம்புமூர்த்தியாக சதாசிவமூர்த்தி என்னும் திருநாமத்துடனும் அவரின் வலப்புறம் அம்பாள் சிவகாமி என்னும் திருநாமத்துடனும் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இருவரும் நித்ய திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் இங்கு வந்து வேண்டுவோருக்கு, கிரக தோஷங்கள் அகன்று விரைவில் திருமணம் கைகூடும். தினமும் ஆறுகால பூஜை சிறப்புற நடைபெறும் இங்கு பள்ளியறை பூஜை கிடையாது.

இவ்வாலயத்தை தரிசித்தால் சிதம்பரம் கோவிலை தரிசித்த புண்ணியம் கிட்டும். கிரக தோஷமுள்ளவர்கள் வியாழக் கிழமை தோறும் இங்கு வந்து தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். தாலி பாக்கியம் கிட்டும். தார தோஷம் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், தொழில் வளம், விவசாய நற்பலன்களும் வாய்க்கப் பெறுவார்கள்.

வழிபடும் முறை

சடாமகுட தீர்த்தத்தில் நீராடி, அருகிலுள்ள விநாயகரை வணங்கி, 27 நட்சத்திரப் படிகள் வழியாக ஆலயத்திற்குள் சென்று கோடி தீபம் (நெய் தீபம்) ஏற்றி சிவன், அம்பாளை தரிசித்து, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி, குருவருளும் திருவருளும் பூரணமாகக் கிட்டும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து முறையே 67 கி.மீ., தென்காசி 14 கி.மீ., குற்றாலம் 12 கி.மீ., செங்கோட்டையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் புளியறை உள்ளது. தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புளியறைக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து பேருந்துகளும் புளியறை வழியாகச் செல்லும்.

- கி.ஸ்ரீமுருகன், கீழப்பாவூர். 

Next Story