சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகள்...


சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகள்...
x
தினத்தந்தி 3 Aug 2017 11:00 PM GMT (Updated: 3 Aug 2017 12:20 PM GMT)

‘நான் ஒரு சாதாரணமானவன் தானே, எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை’ என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே.

‘சமூகப்பொறுப்புணர்வு யார் மீது கடமை?’ என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் கடமை. ஒவ்வொருவருடைய தகுதி, தொழில், அங்கீகாரம், திறமை, ஆற்றல் என்பதைப் பொறுத்து இதன் பரிணாமங்கள் மாறுபடலாம். ஆனால் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவர் மீதும் இது கடமையே.

‘நான் ஒரு சாதாரணமானவன் தானே, எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை’ என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே.

‘ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவன் யார்? எனில் தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சமூகப் பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. உண்மையில் இது அருவருப்பான வி‌ஷயம். ஆயினும் பேசியே ஆகவேண்டிய விவகாரம். சர்வ சாதாரணமாக நாம் காறி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறோம். ஏனையவர்களுக்கு அது எவ்வாறு இடைஞ்சலைத் தரும் என்பது குறித்து கவலைப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவில் பள்ளிவாசலுக்கு அருகே எச்சில் துப்பினார்கள். ஆனால் அதனை மண்போட்டு மூடிவிட மறந்த நிலையில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றபின்னரே பெருமானாருக்கு அது நினைவுக்கு வந்தது. ஒரு நெருப்புப் பந்தத்தை எடுத்தவாறு பள்ளிவாசலுக்கு அருகே வந்து துப்பலைத் தேடினார்கள். அதனை மண்போட்டு மூடினார்கள்.

பின்னர் இவ்வாறு கூறினார்கள்: ‘இன்று இரவு என் வினைப்பட்டியலில் ஒரு குற்றச்செயல் பதிவு செய்யப்படுவதில் இருந்து என்னைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்’ (பத்ஹுல் பாரி).

இந்த ஒரு சிறிய செயலின் மூலம் எவ்வளவு பெரிய சமூகப்பொறுப்புணர்வை நபி (ஸல்) அவர்கள் இங்கே வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

‘நகத்தை வெட்டினால் கூட புதைக்க வேண்டும்’ என்று இஸ்லாம் கூறுகிறது. ‘வெட்டப்பட்ட முடிகளையும் நகங்களையும் மண்ணில் புதைத்துவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்’ (தபரானி).

அவ்வாறு செய்வது மார்க்க கடமை என்பதற்காக அல்ல, மாறாக சமூகப் பொறுப்புணர்வு. அடுத்தவருக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்கவியல்.

அடுத்தவர் அருகில் இருக்கும்போது சப்தமாக உரையாடுவதும் அவ்வாறே அனுமதிக்கப்பட்டதல்ல. குர்ஆன் ஓதும்போதுகூட அதிக சப்தமாக ஓதக்கூடாது என்று இஸ்லாம் கற்றுத்தருகிறது என்று சொன்னால்,  சமூகப் பொறுப்புணர்வு என்பது முஸ்லிமின் மீது கட்டாயக் கடமை என்பதையே இவை வலியுறுத்துகின்றன.

சமூகப் பொறுப்புணர்வின் இன்னொரு பக்கம்தான் அடுத்தவரை புன்னகையுடன் எதிர்கொள்வது. ‘உங்கள் சகோதரரைப் பார்த்து புன்னகைப்பது ஒரு தர்மம்’ என்று இஸ்லாம் கற்றுத் தருவதன் பொருள் என்ன? நான் உங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறேன் என்றால் அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.

உதாரணமாக, ‘நான் உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறேன் என்றால்... உங்களைப் பார்ப்பதில் நான் மகிழ்வுறுகிறேன், நான் சந்தோ‌ஷமாக இருக்கின்றேன், உங்களோடு உரையாட விரும்புகின்றேன், உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த பகையும் கிடையாது, உங்களுடன் உறவை வளர்க்க விரும்புகின்றேன்...’ என்று ஆயிரம் மொழிகளை அந்தப் புன்னகை சொல்லிச் செல்கிறது.

அவ்வாறே ‘நோவினை தரும் பொருட்களைப் பாதையில் இருந்து அகற்றுவதும் ஒரு தர்மமே’ என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். சமூகப் பொறுப்புணர்வின் இன்னொரு கோணம் இது. நோவினை தரும் பொருட்களை நீக்குவது தர்மம் என்றால், அவற்றை பாதையில் போடுவது அதர்மம் அல்லவா..! நமது வீதிகளை குப்பைகளாலும் சிறுநீராலும் நிரப்புவது சமூகப் பொறுப்பற்ற தன்மையின் கடைசி இழிநிலை. பொறுப்பற்ற தன்மையை இதைவிட மோசமாக வெளிப்படுத்த முடியுமா என்ன!

மனித வாழ்வு என்பது மனம்போன போக்கில் வாழ்வதோ, வீண் விளையாட்டுமோ அல்ல. எதை வேண்டுமென்றாலும் செய்யலாம், எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல. சமூகப் பொறுப்புணர்வை எந்த அளவுக்கு இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்றால்...

‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’ என்று திருக்குர்ஆன் (49:12) கூறுகிறது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. சந்தேகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் எதையும்  துருவித்துருவி ஆராயச் சொல்லும். இவ்வாறு ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம் பேச வழிவகுக்கும். புறம் பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை கொலைக்கு வழிவகுக்கும்.

ஆக, பிறர் குறித்த கெட்ட எண்ணம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். எனவே நாம் நினைப்பது போன்று கெட்ட எண்ணம் என்பது வெறுமனே ஒரு எண்ணம் அல்ல. அதுசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். அடுத்தவர் குறித்த நல்லெண்ணம் கொள்ளுதலும் சமூகப் பொறுப்புணர்வே.

‘ஒரு முஸ்லிமை இழிவாக எண்ணுவதே மனிதனுக்கு தீமையால் போதுமானதாகும்’ என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் இன்னொரு அமுத வாக்காகும். (திர்மிதி)

எதிரியாக இருந்தாலும் ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து மோசமான வார்த்தைகள் ஒருபோதும் வெளிவராது என்பதும் சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமே.

மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடம் அனுப்பி வைத்தபோது, ‘மென்மையாகவும் கனிவாகவும் அவனிடம் பேசுமாறு’ அல்லாஹ் ஆணை பிறப்பிக்கின்றான்.

ஏனெனில் கடுமையான பேச்சு என்பது பொறுப்பற்ற செயலின் வெளிப்பாடே.

எனவே சமூகப் பொறுப்புணர்வு என்பது நல்லெண்ணத்தில் தொடங்கி பின்னர் சொல்லாகவும் செயலாகவும் பரிணாமம் பெறுகிறது.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story