உச்சிப்பிள்ளையார்-மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது


உச்சிப்பிள்ளையார்-மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது
x
தினத்தந்தி 25 Aug 2017 11:30 PM GMT (Updated: 25 Aug 2017 10:29 PM GMT)

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

மலைக்கோட்டை,

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 273 அடி உயரத்தில் உள்ள உச்சிப்பிள்ளையாரை 417 படிகள் ஏறினால் தான் தரிசிக்க முடியும். உச்சிப்பிள்ளையாருக்கும், அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்படுவது வழக்கம்.

இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. கொழுக்கட்டை தயாரிப்பதற்காக 6 கிலோ தேங்காய் துருவல், 50 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, சுமார் 24 மணிநேரம் ஆவியில் வேகவைத்து இந்த ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது.

இந்த கொழுக்கட்டையை நேற்று காலை தாயுமானசுவாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து, தொட்டில் போல கட்டி 2 பேர் தலா 75 கிலோவாக பிரித்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கும், மாணிக்க விநாயகர் சன்னதிக்கும் கொண்டு சென்றனர். இந்த ராட்சத கொழுக்கட்டையை காலை 9.15 மணிக்கு உச்சிப்பிள்ளையாருக்கும், 9.45 மணிக்கு மலையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் நைவேத்தியம் செய்து படைத்தனர். பின்னர் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாணிக்க விநாயகர் சன்னதியில் ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல வகையான பழங்களால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நேற்று காலை கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி முன்பாக, உலக நன்மைக்காகவும், ஆன்மிகம் சிறக்கவும், மழை பெய்து நாடு செழிக்கவும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒரு லட்சத்து 8 தோப்புக்கரணம் போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தோப்புக்கரணம் போட்டனர்.

கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும் படிகளில் தரை விரிப்புகளும் போடப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல மலைக்கோட்டையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மலைக்கோட்டைக்கு வந்த பக்தர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு, தனியார் அமைப்பு சார்பில் துணியால் ஆன பைகள் வழங்கப்பட்டது.

நேற்று தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி வரை என 14 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். இதில் 13-ம் நாளன்று மாணிக்க விநாயகர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு மாணிக்க விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். 14-வது நாளில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். இத்துடன் இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறும்.

விழா ஏற்பாடுகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Next Story