வாழ்வில் மகிழ்ச்சி தரும் மகாளயம்


வாழ்வில் மகிழ்ச்சி தரும் மகாளயம்
x
தினத்தந்தி 12 Sep 2017 1:30 AM GMT (Updated: 11 Sep 2017 12:48 PM GMT)

புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம்.

19–9–2017

மகாளய அமாவாசை


புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

இது பிதுர் தேவதைகளுடையதிருப்தியின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள்நரகம் எய்துவதைதவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை, சிறப்பு வாய்ந்ததாகும்.

தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விச‌ஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன் களைச் செய்வது சாலச் சிறந்தது.

சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலசே‌ஷத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசே‌ஷமானது.

தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங்களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங் களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர் களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக் கும் நீர்நிலைகளிலோ, அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார்களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.

Next Story