பக்தன் உருவில் வந்த பரமன்


பக்தன் உருவில் வந்த பரமன்
x
தினத்தந்தி 26 Sep 2017 1:00 AM GMT (Updated: 25 Sep 2017 11:44 AM GMT)

சுதன்மன் என்னும் சிவ பக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாக கணக்கு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தான்.

சுதன்மன் என்னும் சிவ பக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாக கணக்கு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தான். ஒரு முறை அந்தப் பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன், இன்னம்பர் கோவிலின் வரவு செலவுக் கணக்குகளை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு, சுதன்மனுக்கு கட்டளையிட்டான். சுதன்மனும் ஆலயக் கணக்கை எடுத்துக் கொண்டு போய், மன்னனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அந்தக் கணக்கு வழக்குகளில் மன்னனுக்கு ஐயம் ஏற்பட்டது.

‘நாளை பகல் பொழுதுக்குள், என்னிடம் சரியாக இன்னம்பர் ஆலயக் கணக்குகளைச் சமர்ப்பித்தாக வேண்டும்’ என்று உத்தரவிட்டான் சோழ மன்னன்.

எந்த இடத்தில் கணக்கில் தவறு செய்தோம் என்று தெரியாத நிலையில் மனக்குழப்பம் அடைந்தான் சுதன்மன். பின்னர் எழுத்தறிநாதரின் கருவறை முன்பாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து துதித்தான். தன் வேதனையை, தனக்கு வந்திருக்கும் துன்பத்தை களைய வேண்டி பிரார்த்தித்தான். மறுநாள் சுதன்மன், மன்னனைச் சந்திக்கச் சென்றான்.

அவனைப் பார்த்து மன்னன், ‘இன்று காலையிலேயே இன்னம்பர் ஆலயக் கணக்கு வழக்குகளை என்னிடம் மிகச் சிறப்பாக ஐயமுற விளக்கி விட்டீர்களே.. பிறகென்ன?’ என்று கேட்டான்.

சுதன்மனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அப்படியா?.. ஒன்றுமில்லை’ என்றபடியே எழுத்தறிநாதரின் ஆலயத்திற்கு வந்தவன், அங்கேயே ஓரிடத்தில் படுத்து கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘பக்தா! நான்தான் உன் உருவத்தில் மன்னனிடம் சென்று ஆலயக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தேன்’ என்று கூறி மறைந்தார்.

எழுத்தறிநாதரின் அருட்கருணையை நினைத்து தன் கடைசி காலம் வரை, அவரது கோவிலிலேயே வழிபட்டு, பின்பு சிவலோகப் பதவி அடைந்தான் சுதன்மன்.

Next Story