உயர்பதவி வழங்கும் சாமுண்டீஸ்வரர்


உயர்பதவி வழங்கும் சாமுண்டீஸ்வரர்
x
தினத்தந்தி 31 Oct 2017 7:50 AM GMT (Updated: 31 Oct 2017 7:50 AM GMT)

சிவபூஜை என்பது மானிடர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?. ‘இல்லை’ என்பதற்கு புராணங்களில் பல ஆதாரங்கள் உண்டு.

ல்லூரில் சிங்கம், சாத்தமங்கையில் குதிரை, கருவூர் மற்றும் பட்டீஸ்வரத்தில் பசு, சிவபுரத்தில் பன்றி, குரங்காடு துறையில் பாம்பு, சோலூரில் மீன், திருத்தேவன்குடியில் நண்டு, ஆனைக்கா மற்றும் மதுரையில் யானை, திருவெறும்பூரில் எறும்பு இப்படி பல தலங்களில் மிருகங்கள், நீர் வாழ்வன, ஊர்வன என பல உயிர்கள் இறைவனை பூஜித்து பலன் பெற்ற தகவல்கள் புராணங்களில் நிறைய உண்டு.

சிலந்தி பூஜித்த கதை

யானையும் சிலந்தியும் சிவபெருமானை போட்டி போட்டுக் கொண்டு பூஜித்த கதை தெரியுமா? இதோ அந்த வரலாற்றுக் கதை!

கயிலாயத்தில் கணநாதர்களான மாலியவான், புஷ்பதந்தன் இருவரும் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

யானையும் சிலந்தியும் ஒரு வனத்தில் வசித்து வந்தன. அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. காய்ந்து போன மரத்தின் சருகுகள் அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதை கண்ட சிலந்தி பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?

உடனே சிவபெருமானின் தலைக்கு மேலே சிலந்தி ஒரு வலையை பின்னியது. உதிரும் சருகுகள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள சிவபெருமானின் மேல் சருகுகள் விழாமல் சிலந்தியால் தவிர்க்கப்பட்டது. அது முதல் சிலந்தி சிவபெருமானை தினந்தினம் பூஜித்து வந்தது.

ஒரு நாள் அந்த வழியாக வந்த புஷ்பதந்தனான யானை, அந்த சிவலிங்கத்தைக் கண்டது. சிவபூஜை செய்ய அந்த யானைக்கும் ஆசை வந்தது. சிவபெருமானின் மேல் இருந்த சிலந்தி வலையை கண்ட யானை, அந்த வலையை பிய்த்து எறிந்தது. பின் தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

தினம் தினம் யானை இப்படி செய்யவே சிலந்திக்கு எதுவும் புரியவில்லை.

நான் சிரமப்பட்டு தினம் கட்டும் வலையை யார் இப்படி பிய்த்து எறிவது? எப்படியும் இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிய சிலந்தி, ஒரு நாள் மறைவில் காத்திருந்தது.

யானையும் வந்தது?.

வழக்கம் போல் சிலந்தி வலையை பிய்த்து எறிந்த யானை, தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

தான் ஆசையாய் கட்டிய வலையை பிரித்த யானையின் மீது சிலந்திக்கு கோபம் கோபமாக வந்தது. உடனே விறு விறுவென ஊர்ந்து யானையின் தும்பிக்கைக்குள் போய் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாத யானை பிளிறியது. வலி குறையவில்லை. உடனே தன் துதிக்கையை மூர்க்கத்தனமாக தரையில் அறைந்தது. அது அறைந்த வேகத்தில் சிலந்தி இறந்தது. இதைக் கண்ட சிவ பெருமான் இருவர் முன் தோன்றினார். இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார்.

யானையாய் இருந்த புஷ்பதந்தன் கயிலாயத்தை அடைந்து, முன்பு போலவே கணநாதர்களில் ஒருவனாய் இருக்கும்படி அருளினார். சிலந்தியான மாலியவான் பல திருக்கோவில்களை கட்டி வழிபட்டு, பின்னர் கயிலாயம் வரும்படியும், அதற்கு ஏற்றதுபோல் அவன் சோழர் குலத்தில் பிறக்கும்படியும் அருளினார் இறைவன்.

அவர் அருளியபடி மாலியவான் சோழர் குலத்தில் பிறந்தான். அவனே கோ செங்கோட்சோழன் என்று கூறப்படு கிறது. அவன் தனது ஆட்சி காலத்தில் 70 கோவில்களை கட்டினான். முற்பிறவியில் யானை மேல் ஏற்பட்ட சினம் காரணமாக யானை ஏற முடியாதபடி அனைத்து கோவில்களையும் அவன் மாடக் கோவில்களாகவே கட்டினான்.

ஆலய அமைப்பு

அப்படி அவன் கட்டிய கோவில்களில் ஒன்று சோழிய விளாகத்தில் உள்ள சாமுண்டீஸ்வர சுவாமி ஆலயம்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தி பகவான் தனி மண்டபத்தில் அருள்பாலிக் கிறார். அடுத்து உள்ளது மகாமண்டபம். இந்த மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி பிருகந்நாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறாள். அம்மன் சன்னிதியின் முன்பு நந்தியும், பலிபீடமும் உள்ளன.

அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் இரட்டை விநாயகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமுண்டீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டியதை வழங்கி வருகிறார்.

இறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் அர்த்த நாரீஸ்வரர், நர்த்தன கணபதி, கங்காள மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடதிசையில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனார் ஆகியோரும் அமர்ந்து அருள் வழங்குகிறார்கள்.

நான்கு புறமும் அழகிய நெடிந்துயர்ந்த திருமதில் சுவர்கள் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன. பிரகாரத்தின் வடக்கில் சண்டீகேஸ்வரர் சன்னிதி உள்ளது. தென் பிரகாரத்தில் தீர்த்தங்கர சாஸ்தாவின் திருமேனி திறந்த வெளியில் உள்ளது. இவருக்கு காப்பரிசி நைவேத்தியம் படைத்து, அபிஷேகம் செய்து பிரார்த்தனையோடு வழிபட்டால் மழை பொழியும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம் ஆகும்.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்

ஆராதனைகள்

சோமவாரங்கள், சிவராத்திரி, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஐப்பசியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு பலன்பெறுகின்றனர்.

மகாமண்டபத்தின் இடதுபுறம் உள்ள இரட்டை விநாயகரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தால், களவு போன பொருட்கள் திரும்பக் கிடைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

முற்பிறவியில் சிலந்தியாக இருந்து சிவபூஜை செய்ததால், மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்தான் மன்னன் கோ செங்கோட்சோழன்.

அதேபோல் இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவதால், நாம் செய்த பாவங்கள் யாவும் கரையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து தடத்தில் உள்ளது பந்தநல்லூர். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோழிய விளாகம் என்ற இந்த தலம்.

-ஜெயவண்ணன். 

Next Story