குகையில் குடியிருக்கும் குமரக் கடவுள்


குகையில் குடியிருக்கும் குமரக் கடவுள்
x
தினத்தந்தி 8 Nov 2017 1:36 PM GMT (Updated: 8 Nov 2017 1:36 PM GMT)

தொல்காப்பிய மரபுப்படி மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன் என்றாலும், அந்த அற்புதக் கடவுள் அனைத்து இடங்களிலுமே கோவில் கொண்டுள்ளார்.

முருகப்பெருமான் தமிழ்நாட்டில் பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணிகை, குன்றக்குடி போன்ற மலைகளில் மட்டுமன்றி, பழமுதிர்ச்சோலையில், கடல் அலை தாலாட்டும் திருச்செந்தூர் மற்றும் நதிக்கரை ஓரங்களிலும் கூட கோவில் கொண்டு கோலோச்சுகிறார்.

தென்னகத்தில் முருகன் என்றும், வடபுறத்தில் கார்த்திகேயன் எனவும் போற்றப்படும் தெய்வம், இலங்கையில், கதிர்காமம், யாழ்ப்பாண நல்லூர், லண்டன், கிழக்கு ஹேம், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தமிழர்களின் தனித் தெய்வமாக அருளாட்சி புரிகிறான்.

குகைக் கோவில்

மலேசிய மண்ணில் முருகன் வீற்றிருக்கும் இடம் சற்று வித்தியாசமானது. குகன் என்ற பெயருக்கேற்ப குகையில் வாழுகிறான். குகை என்றதும் இங்கே உள்ள கல் மலையில் குனிந்து செல்லும் குறுகிய குகை அல்ல. மர வளம் மிகுந்த உயர்ந்த சுண்ணாம்பு மலைக்குகையில் கோவில் கொண்டு பரவசப்படுத்துகிறான். ‘பது கேவ்’ என்றால் மலாய் மொழியில் ‘சுண்ணாம்பு குகை’ எனப் பொருள்படும். தமிழர்கள் பேச்சு வழக்கில் பத்துமலை ஆக்கிவிட்டனர்.

பசுமை போர்த்திய நெடிய மலைத் தொடரின் அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் பொன்னிறத்தில் மின்னும் வேலவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த சிலை இதுதான். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகளின் கைவண்ணத்தில் 2006-ல் உருவானது இந்தச் சிலை.

சிவாலயம்

வலப்புறத்தில், அரச மரத்தடியில் விநாயகருக்கு கோவில் உள்ளது. அவருக்கு தோப்புக் கரணம் போட்டு விட்டு, சில படிகள் ஏறினால் நந்தி தேவர் அமர்ந்திருக்க, அருகில் சுந்தரேசர் சிவலிங்கமாக வீற்றிருக்கிறார். தேவ கோட்டத்தில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி, மேற்கு கோட்டத்தில் லிங்கோத்பவர், வடக்கு நோக்கி நான்முகனும், துர்க்கா தேவியும் அருள்புரிகின்றனர். அருகே சண்டிகேசர் வீற்றிருக்கும் சன்னிதியையும் தரிசித்து விட்டு கீழே வந்தால் மீனாட்சி அம்மன் புன்னகை தவழ காட்சிதருகிறாள்.

சரி.. குகையில் வாழும் சுப்ரமணியரைத் தரிசிக்கச் செல்வோம். பொன்னிற வேலவனின் அருகே இருக்கும் தோரண வாயிலைக் கடந்து 272 செங்குத்தான படிகளில் ஏறவேண்டும். படிகளை ஒட்டி அமைந்த செயற்கை நீரருவி ஆலயத்திற்கு அழகு சேர்க்கிறது.

குகை வாசலில் நுழைந்தவுடன் நமது வலக்கை பகுதியில் இடும்பனுக்கு சிறு சன்னிதி உள்ளது. அவர் காவடி எடுப்போரின் முன்னோடி அல்லவா. அவரை வேண்டிக் கொண்டு கொஞ்ச தூரம் படிகளில் சென்றால் மூலவர் முருகன் இருக்கிறார்.

இவ்வளவு பெரிய குகைக்குள் உள்ள ஒரு சிறு குகைக்குள் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். கீர்த்தியில் பெரியவராய் உருவத்தில் சிறிய மூர்த்தியாக வெள்ளியால் மின்னுகிறார்.

அவரது திருவடி அருகே வேல் ஒன்று உள்ளது. அதற்கு தான் அபிஷேகம் செய்கிறார்கள். அந்த இடத்துக்கு சென்றதும் நமக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இப்பெருமானைப் பிரார்த்தித்துக் கொண்டால் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூலவரான முருகர் தனியாக நின்றபடி தரிசனம் தருகிறார். மூலவர் சன்னிதிக்கு மேலே சற்று உயரமான இடத்தில், சுப்ரமணியர் தன் தேவியர்கள் இருவருடன் காட்சி தருகிறார்.

இப்பெருங்குகையின் உள்ளே ஒரு பகுதியில் பழநி தண்டாயுதபாணிக்கு சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது.

மலாய் மொழியும், சீன மொழியும் பேசப்படும் இந்நாட்டில் இருக்கும் இந்த இயற்கைக் கோவிலின் இறை சன்னிதியில் ‘கந்தா போற்றி.. கடம்பா போற்றி’ என்று தமிழில் அர்ச்சிக்கிறார்கள். அந்த முருகனின் தேன்தமிழ்ப் பாக்களின் இசை காற்றில் மிதந்து கொண்டிருந்தது.

வித்தியாசமான வழிபாட்டு அனுபவத்துடன் படிகள் இறங்கி கீழே வந்தால், பொன்னிற சிலைக்கு இடப்புறம், அதாவது சிவாலயத்துக்கு எதிரே சனீஸ்வரன் வீற்றிருக்கும் தனி சன்னிதியும், எதிரே ஒன்பது கோள்கள் இருக்கும் நவக்கிரக சன்னிதியும் இருக்கிறது. அந்த இடத்தில் ஆஞ்சநேயருக்கும் சன்னிதி அமைந்துள்ளது.

தல வரலாறு

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாரியம்மன் கோவில் அமைத்து பக்தி செலுத்திக் கொண்டிருந்த வணிகத் தமிழரான தம்பு சாமிப்பிள்ளை என்பவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, தனது அருட்சக்தி இந்த இடத்தில் இருப்பதை உணர்த்தினார். அப்போது மலேசியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளரின் அனுமதி பெற்று 1891-ல் சன்னிதியையும் கோவிலையும் அமைத்து வழிபாடுகளைத் தொடங்கினார்.

தைப்பூசம்


சுப்ரமணிய சுவாமிக்கு உகந்த கார்த்திகை, கந்தசஷ்டி போன்ற விழாக்களை விட பத்துமலை தைப்பூசவிழா உலகப் புகழ்பெற்றது. தமிழகத்தில் பழநிமலை போல மலேசியாவில் பத்துமலையில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து, பால் குடங்களை ஏந்தியும், காவடிகள் தூக்கியும், நாக்கில் வேல் குத்திக்கொண்டும், கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து மலை ஏறி வழிபடுகிறார்கள்.

மலேசியத் தமிழர்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நாடுகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதும். மலாய், சீன மக்களும் பிரார்த்தித்துக் கொண்டு தைப்பூச விழாவில் பங்குபெறுவது பரவசமான காட்சியாகும்.

கோலாலம்பூர் தலைநகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

குன்றிருக்கும் இடமெங்கும் குமரன் இருப்பான் என்பதனை விட தமிழர் இருக்கும் இடமெல்லாம் தமிழ்க்கடவுளான முருகன் காட்சிதந்து அருள்புரிகிறான் என்பது தான் உண்மை.

-டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர். 

Next Story