செடிகளாக உருமாறிய இளவரசிகள்


செடிகளாக உருமாறிய இளவரசிகள்
x
தினத்தந்தி 28 Nov 2017 10:16 AM GMT (Updated: 28 Nov 2017 10:16 AM GMT)

கோசலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்த, பசுமை போர்த்திய அந்த வனத்தில், ஒரு அரச மரத்தின் கீழ் சுவேதவாஜூ என்ற முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் சாஸ்தாவை வேண்டி தியானித்தபடி இருந்தார்.

கோசலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்த, பசுமை போர்த்திய அந்த வனத்தில், ஒரு அரச மரத்தின் கீழ் சுவேதவாஜூ என்ற முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் சாஸ்தாவை வேண்டி தியானித்தபடி இருந்தார்.

கோசலை தேசத்தை நந்திவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு பீமன் (மகாபாரத பீமன் அல்ல) என்ற மகனும், சுகுணா, சுந்தராங்கி என்ற மகள்களும் இருந்தனர்.

ஒரு நாள்.. இளவரசிகள் இருவரும் தங்களது தோழிகளுடன் கோசலை தேசத்தின் நந்தவனத்தைச் சுற்றிப் பார்க்க சென்றார்கள். பின்னர் அங்கே அனைவரும் ஓடிப் பிடித்து விளையாடினர். இளவரசிகள் இருவரும் மறைந்து விளையாடியபோது, தங்களையும் அறியாமல் வனத்திற்குள் புகுந்துவிட்டனர். வனத்தின் அழகு அவர்களைக் கவர்ந்ததால், அதை ரசித்தபடியே முனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

முனிவர் இருக்கும் மரத்தின் மேல் பெரிய தேன் கூடு ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் இளவரசிகளுக்கு, அந்தத் தேனை ருசித்துப் பார்க்கும் ஆசை பிறந்தது. அந்த ஆசை, முனிவர் தவத்தில் இருப்பதையே மறக்கச் செய்து, கல்லைக் கொண்டு தேன்கூட்டை நோக்கி வீசச் செய்தது.

கல் பட்ட தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் அனைத்தும் நாலாபுறமும் கலைந்து பறந்தன. அதைக்கண்டு இளவரசிகள் இருவரும் பெரிய மரத்தின் பின்புறமாகச் சென்று மறைந்து கொண்டனர். தேனீக்களோ மரத்தின் அடியில் இருந்த முனிவரை பதம் பார்த்தன. இதனால் அவரது தவம் கலைந்து போனது. தேன்கூடு கலைக்கப்பட்டிருப்பதைக் கண்ட முனிவர், அதற்கு காரணமானவர்களை தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார்.

கோபத்தில், ‘ஏய்.. பதர்களே! நீங்கள் துள்ளிக், குதித்து விளையாட இது என்ன அரண்மனை நந்தவனமா? மாமன்னர் குடும்பத்தில் பிறந்த நீங்கள் இப்படி இழிச்செயலில் ஈடுபட்டு விட்டீர்களே! மறைவில் இருந்து வெளியே வாருங்கள்’ என்று கத்தினார்.

மரத்தின் பின்னிருந்து வெளிவந்த இளவரசிகள் இருவரும், ‘சுவாமி! அறியாமல் தவறிழைத்து விட்டோம். மன்னித்துவிடுங்கள்’ என்றனர்.

ஆனால் முனிவரோ, சுகுணாவை பார்த்து, ‘நீ.. நிலத்தில் வளரும் ஜவ்வந்தி தாவரமாக மாறக்கடவது’ என்றும், சுந்தராங்கியைப் பார்த்து, ‘நீ நீரில் வளரும் செங்கழுநீர் தாவரமாக மாறக்கடவது’ என்றும் சபித்தார்.

அடுத்த நொடி... இருவரும் தாவரங்களாக மாறினர்.

இந்த நிலையில் தன் மகள்களைக் காணாது, மன்னன் நந்திவர்மன் வனத்திற்கு வந்தார். பின்னர் தவத்தில் இருந்த முனிவரிடம் ‘என் மகள்களைக் கண்டீர்களா?’ என்று கேட்டான்.

முனிவர் நடந்த அனைத்தையும், மன்னனுக்குத் தெரிவித்தார். மகள்களின் நிலையை எண்ணி வருந்திய மன்னன், அவர்களின் சாபம் நீங்க வழி கூறும்படி வேண்டினான்.

அதற்கு முனிவர், ‘மன்னா! என்னால் உன் மகள்களுக்கு சாப விமோசனம் கொடுக்க முடியாது. அனைவரையும் காத்து அருளும் சாஸ்தா தான் சாப விமோசனம் அளிக்கும் ஆற்றல் படைத்தவர். அவரை நோக்கி தவம் இருங்கள்’ என்றார்.

அதன் பிறகு, முனிவரை வணங்கி விடைபெற்ற நந்திவர்மன் நாடு திரும்பினான். தனது மகன் பீமன் நாட்டை ஆள அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தினான். மகன் மன்னர் பொறுப்பை ஏற்றவுடன், மகள்களின் சாப விமோசனத்திற்காக தன்னுடைய சுக தூக்கத்தை துறந்து கானகத்தை அடைந்தான். காற்றை மட்டும் சுவாசித்து சாஸ்தாவின் அருள்வேண்டி கடும் தவத்தில் ஆழ்ந்தான் நந்திவர்மன்.

நாட்கள் உருண்டோடி வருடங்கள் பல கடந்தன. நந்திவர்மனின் தவத்தில் மெய்மறந்த சாஸ்தா, தனது யானை வாகனத்தில் மன்னன் முன் தோன்றி, ‘பக்தரே! யாம் உமது பக்தியில் மெய் மறந்தோம். நீவிர் வேண்டி கொண்டபடி உமது புத்திரிகள் இருவரது சாபத்தையும் விலக்கி கொண்டோம். அவர்கள் சாபம் பெற்ற ஜவ்வந்தி பூக்களையும், செங்கழுநீர் பூக்களையும் எமது பூஜைக்கு ஏற்றுக்கொள்கிறேன். இந்த இரு மலர்களையும் படைத்து என்னை வழிபடுபவர்களுக்கு, யாகங்கள் செய்த பலன்களும், புண்ணியங்களும் கிடைக்கும்’ என்று அருள் செய்தார்.

சாஸ்தா அருள்பாலித்த மறு நொடியே செடிகளாக உருமாறி இருந்த இளவரசிகள் இருவரும், மீண்டும் சுயஉருவத்தைப் பெற்றனர். மகள்களை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில், நந்திவர்மன், சாஸ்தாவை பலவாறாக துதித்து வணங்கினான்.

-குருவன்கோட்டை ஸ்ரீமன்.

Next Story