வெட்ட வெளியில் சுயம்பு சனீஸ்வரர்


வெட்ட வெளியில் சுயம்பு சனீஸ்வரர்
x
தினத்தந்தி 19 Dec 2017 5:11 AM GMT (Updated: 19 Dec 2017 5:11 AM GMT)

சனி சிங்கனாப்பூர்.. மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம் தான் இது.

னி சிங்கனாப்பூர்.. மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம் தான் இது. இந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் கனமான பலகை போன்ற ஒரு கல் மிதந்து வந்து, சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.

அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத கிராம மக்கள் அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு கிராம தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த கிராமத்தில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில் தான் சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல்லில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது.

சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40,000 பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுகிறார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விேசஷமாக நல்லெண்ெணய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

செல்லும் வழி

சீரடி நகரில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும், அகமது நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கி.மீ. தொலைவிலும், பூனாவில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கி.மீ.தொலைவில் உள்ளது.

கதவுகள் இல்லாத வீடுகள்

சனி சிங்கனாப்பூரில் உள்ள எந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை என்பது ஆச்சரியமான சிறப்பம்சமாகும். வாசலில் நிலைக் கதவுகள் காணப்படுகின்றன. ஆனால் கதவுகள் இல்லை. இதற்கு அங்கே திருடினால் சனி பகவான் தண்டித்து விடுவார் என்ற பயம் தான் காரணமாம். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

2011-ம் ஆண்டில் இங்கு தொடங்கப்பட்ட யூகோ வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்கள் மட்டுமே கதவு கொண்டு மூடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story