மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா 31-ந்தேதி நடக்கிறது


மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா 31-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 18 Jan 2018 10:02 PM GMT (Updated: 22 Jan 2018 8:09 AM GMT)

மீனாட்சி அம்மன் கோவிலில் தைமாத தெப்பத்திருவிழா வருகிற 31-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால் மதியம் சாமி கோவிலை வந்தடைகிறார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. நாளை(20-ந் தேதி காலை கொடியேற்றம் நடந்து, வருகிற 31-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமி நான்கு சித்திரை வீதிகளை காலை, இரவு என இருவேளையும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் நிலை தெப்பம் தான் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் அதிகாலை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமி பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்படாகி மாரியம்மன் தெப்பக்குளம் செல்கின்றனர். அங்கு காலை 9.30 மணிக்கு மேல் 9.54 மணிக்குள் சாமி நிலை தெப்பத்தில் எழுந்தருளுவர். தொடர்ந்து தெப்பக்குளத்திற்குள் உள்ள மைய மண்டபத்திற்கு சென்று அங்கு சாமிக்கு தீபாராதனை நடைபெற்று, மீண்டும் முக்தீஸ்வரர் கோவிலை வந்தடைகிறார்.

இந்த வருடம் தெப்பத்திருவிழா அன்று (31-ந்தேதி) சந்திரகிரகணம் என்பதால் முக்தீஸ்வரர் கோவிலில் இருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமி தங்க குதிரை வாகனத்தில் புறப்படாகி தெப்பக்குளத்தின் வெளியே ஒரு முறை வலம் வந்து, அங்கிருந்து புறப்படாகி அன்று மதியம் 2 மணிக்குள் கோவிலை வந்தடைகிறார்.

சென்ற கிரகணம் இல்லாத நாட்களில் சாமி இரவு புறப்படாகி, 10 மணிக்கு மேல் தான் கோவிலை வந்தடைவது வழக்கம்.

மேலும் திருவிழா தினத்தன்று அதிகாலை சாமி தெப்பக்குளம் செல்வதால், சாமி கோவில் வந்து சேரும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

மேலும் 31-ந்தேதி சந்திரகிரகணம் மாலை 6.22 மணி முதல் 8.41 மணி வரை உள்ளது. எனவே கிரகணம் முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு பின்பு கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அர்த்தசாமம் பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்று, மீண்டும் நடை அடைக்கப்படும். சந்திர கிரகணத்தை யொட்டி இரவு 9 மணி முதல் 9.45 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பக்தர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்களின் நலன் கருதி, ஆயிரங்கால் மண்டம் திறந்து வைக்கப்படும். உள்ளே வருபவர்கள் கிழக்கு ராஜகோபுரம் வாசல் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி திருவிழா நாட்களில் திருக்கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ தங்கரதம் உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் பதிவு செய்ய இயலாது. மேலும் தெப்பத்திருவிழா அன்று மாலை தெப்பக்குளத்தை சுற்றி உள்ள மதிற்சுவர்களில் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். ஆனால் அப்போது சந்திர கிரகணம் நடைபெறுவதால் விளக்குகள் ஏற்றப்படாது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இதேபோல முருகப்பெருமானின் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது

திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப் பெருமான் புறப்பட்டு கம்பத்தடிமண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, மா இலை தர்ப்பை புல் ஆகியவை கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 10.10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வலம் வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந் தேதி ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் விஜயராகவன், மன்னர் கல்லூரி துணைத் தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story