மலேசியாவின் மூன்று படைவீடுகள் -பனையபுரம் அதியமான்


மலேசியாவின் மூன்று படைவீடுகள் -பனையபுரம் அதியமான்
x
தினத்தந்தி 30 Jan 2018 5:01 AM GMT (Updated: 30 Jan 2018 5:01 AM GMT)

தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.

தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை பத்துமலை, தண்ணீர்மலை, கல்லு மலை ஆகும். இம்மூன்று ஆலயங்களைப் பற்றியும் இந்த தைப்பூச விழாக் காலத்தில் அறிந்து கொள்வோம். இவ்விழாக்களில் தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிகஅளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தைப்பூசத்தன்று ஐந்து மாநில அரசுகள் பொதுவிடுமுறை அளிப்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.

கோலாலம்பூர் பத்துமலை

மலேசியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் புகழ்பெற்றதாகவும், உலக அளவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாகவும் திகழ்வது, கோலாம் பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் ஆலயம் ஆகும். இங்கு மூலவராக விளங்குவது, வேல் மட்டுமே. இம்மலை சுண்ணாம்புக் கற்களால் ஊசிப்பாறைகள் கொண்டு உருவான இயற்கை குகையாகும். இந்த மலையின் வயது நாற்பதுகோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்துமலை என்ற பெயர், பத்துமலை அருகே ஓடும் கங்கை பத்து என்ற ஆற்றின் பெயரால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாலயம் சுமார் 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கி.பி. 1891-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கே. தம்புசாமி பிள்ளை, பத்துமலைக் குகையில் 400 அடி உயரத்தில் சுப்பிரமணிய சுவாமியின் வேலினை நிறுவி, வழிபாட்டினைத் தொடங்கினார்.

இன்று இவ்வாலயத் திருப்பணி மற்றும் 140 அடி உயர முருகப்பெருமான் சிலை அமைக்கும் பணி டான்ஸ்ரீ டத்தோ நடராஜா தலைமையில் நான்காண்டுகள் நடைபெற்று, 2006-ம் ஆண்டு இச்சிலை திறந்து வைக்கப்பட்டது. பத்துமலை அடிவாரத்தில், முருகப்பெருமான் சிலை, விண்ணை முட்டி கம்பீரமாக காட்சி தருகின்றது.

அமைவிடம்

மலேசிய நாட்டின் தலைநகரமாய் திகழும் கோலாலம்பூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் பத்துமலை அமைந்துள்ளது. இது சிலாங்கூர் மாநிலம், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பினாங்கு தண்ணீர்மலை

மலேசிய நாட்டின் தனித்தீவு நகரம் பினாங்கு. மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இதில் உள்ளது தண்ணீர்மலை முருகன் ஆலயம்.

சோழமன்னன் வென்ற கடாரம் என்ற ஊர், இத்தீவின் அருகேயுள்ள கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது. நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாக பினாங்கும், கோலாலம்பூரும் திகழ்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகரத்தார் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி, ஐந்து ஏக்கர் பரப்பில் தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயம் அமைத்துள்ளனர். இதுதவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், இன்று தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் கொடிமலை முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.

அதன்பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகே தண்ணீர்மலை முருகன் கோவில் பெரிய அளவில் வெளியே தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்து அறப்பணி வாரியம் புதிய கோவில் கட்ட முன்வந்தது.

மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி பகுதி தேர்வு செய்யப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட படிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. சுமார் நானூறு அடி உயரத்தில் ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஈப்போ கல்லுமலை

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ. பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போ, கோடீஸ்வரர்களின் பூமி என்ற அடைமொழியால் வழங்கப்படுகிறது. கிந்தா என்ற நதியும், சுங்கை பிங்கி, சுங்கை பாரி என்ற துணைநதிகளும் பாயும் ஊர் இது. சுண்ணாம்புக் குன்றுகள் நிறைந்த நகரம். வெள்ளீயம் அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்ட பூமியும் இதுவே.

இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது.

இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

ஆலயம் கிந்தா நதிக்கரையில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. உள்ளே விசாலமான பிரகாரம், நடுவில் பிரம்மாண்ட முன்மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. மயில்கள் நிறைந்த தனிப்பகுதியும் இருக்கிறது.

ஆலயத்தின் நடுப்பகுதியில், கல்லுமலை சுப்பிரமணியர், திருச்செந்தில் நாதனின் மறுவடிவமாக சிரித்த முகத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரே ஈப்போ மக்களை காத்தருளும் இறைவன்.

ஈப்போ நகரில் குனோங்கிலோ பகுதியில், ஜாலான் ராஜா மூசா அசீஸ் சாலையில் கல்லுமலையின் அடிவாரத்தில், கிந்தா நதிக்கரையோரம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது.

Next Story