வேண்டுதலைக் கேட்கும் நந்தீஸ்வரர்


வேண்டுதலைக் கேட்கும் நந்தீஸ்வரர்
x
தினத்தந்தி 21 Feb 2018 9:47 AM GMT (Updated: 21 Feb 2018 9:47 AM GMT)

பார்வதி தேவியே தன் கணவனான சிவபெரு மானைக் காண நந்தியிடம் அனுமதி வேண்டி நின்றதாக புராணங்கள் கூறுகிறது.

சிவபெருமானின் அருகில் இருக்கும் பெரும் பாக்கியத்தை பெற்ற தேவ கணம் நந்தியம்பெருமான். சிவனின் இருப்பிடமான கயிலாயத்தின் காவலர். நந்தியின் அனுமதியின்றி சிவனைப் பார்ப்பது இயலாது. பார்வதி தேவியே தன் கணவனான சிவபெரு மானைக் காண நந்தியிடம் அனுமதி வேண்டி நின்றதாக புராணங்கள் கூறுகிறது.

இவ்வளவு பெருமைமிக்க நந்தியின் காதுகளில் நம் கஷ்டங்களைச் சொன்னால் அவை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதனால் நாம் நந்தியின் காதுகளில் நம் கஷ்டங்களைச் சொல்ல வேண்டும். மனதில் நினைத்தால் போதாதா?

இதோ காரணம்... எந்நேரமும் தன்னுடைய வேகமான மூச்சுக்காற்றால் சிவனை நோக்கி விசிறியபடி சிவத்தொண்டு புரிந்து வரும் நந்தியின் காதுகளில் நம் மூச்சுக் காற்று படும்படி ‘நந்திகேச மகாபாஹ, சிவத்யான பாராயணா, உமாசங்கர சேவோர்த்தம் அனுக்யாம் தாதுமர்ஹசி’ என்று பிரார்த்திக்க வேண்டும். அதாவது ‘மூச்சுக் காற்றால் மிகப்பெரும் சிவத்தொண்டு புரிகின்ற நந்தியம் பெருமானே.. உமாசங்கரனை வழிபட எனக்கு அனுமதி தந்தருள்வாயாக..’ என்று மெதுவாக கேட்க ஆரம்பித்தார்கள் பக்தர்கள்.

அதுவே நாளடைவில் நம் குறைகளை நந்தியின் காதுகளில் முறையிட்டால் அவைகளை ஈஸ்வரனிடம் எடுத்துக் கூறி தீர்த்து வைப்பார் என்று ஆயிற்று. ஆகவே தான் சிவனுக்கும், நந்திக்கும் உகந்த நாளான பிரதோஷத்தில் நந்தியின் காதுகளில் தங்கள் குறைகளைச் சொல்ல மக்கள் போட்டி போடுகின்றனர் .

மேலும் நாம் வேளாண்மை செழிக்க நந்தியைப் பூஜிக்க வேண்டும் என்கின்றனர் ஆன்றோர்கள். காரணம் நாம் நெல் விளைந்து அறுவடை ஆனதும் சத்தான அரிசியை நம் பயன்பாடிற்கு எடுத்துக்கொண்டு கழிவுப்பொருளான வைக்கோல்களை காளை மாடுகளுக்கு தருகிறோம். காளையானது அதையும் உணவாக எடுத்துக்கொண்டு அதினின்று வெளிவரும் சாணத்தை உரமாக நமக்கு பயன்பட வைக்கிறது. இதற்கு நன்றியாகவே நாம் வேளாண்மை செழிக்க நந்தியை வணங்குகிறோம். 

Next Story