பஞ்சநதன நடராஜர்


பஞ்சநதன நடராஜர்
x
தினத்தந்தி 21 Feb 2018 10:16 AM GMT (Updated: 21 Feb 2018 10:16 AM GMT)

பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வெளி வரும் ஆரோக்கியமான கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்துள்ளது பாடலூர் என்ற திருத்தலம். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருஊற்றத்தூர் என்ற ஊர் வரும். இங்குள்ள ஆலயத்தில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநத கல்லால் செய்யப்பட்ட அபூர்வ நடராஜர் திருமேனியை தரிசிக்கலாம்.

பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வெளி வரும் ஆரோக்கியமான கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை அரிதானது என்பது ஆலயத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல்.

ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை, தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுனர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால், இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் அழகாக காட்சியளிக்கிறார்.

சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு, அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து வழிபட வேண்டும். பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் எல்லாவித நோய்களும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். 

Next Story